கோலாலம்பூர், ஆகஸ்ட் 31: அனைத்து மலேசியர்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசி ராஜா சாரிட் சோபியா ஆகியோர் 69 -ஆவது தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாமன்னர் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவின் மூலம் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாமன்னரும் பேரரசியாரும் இன்று காலை 8 மணியளவில் புத்ராஜெயாவில் நடைபெற்ற 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோர் மாமன்னர் தம்பதியினரை வரவேற்றனர்.
“Malaysia MADANI: Kesejahteraan Dinikmati” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம், இராணுவ மரியாதை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கண்கவர் மேடை நிகழ்ச்சிகளும், வண்ணமயமான அணிவகுப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சிகள், நாட்டின் பல்வேறு இன, சமய, கலாசார வேறுபாடுகளை மதிக்கும் மலேசியா மடாணியின் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தன.
இந்த பிரமாண்டமான தேசிய தினக் கொண்டாட்டத்தில் 80,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







