காத்மாண்டு, ஆகஸ்ட் 27 - நேற்று ( புதன்கிழமை ) நேபாளத்தை சீர்குலைத்த கொடூர வெள்ளத்தில், 50 க்கும் மேற்பட்ட மலேசியர்களை இன்னும் தொடர்புக் கொள்ள முடியாமல் உள்ளது.
அவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக, காத்மாண்டு மலேசிய தூதரக அதிகாரி மொஹமட் ஃபிர்டாவுஸ் அஸ்மான் , நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், மலேசியர்களைத் தொடர்புக் கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
நேபாளத்தில் உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் குறித்த தகவல் அறிய , அவர்களது பயண கடப்பிதழ் விபரங்கள், பயண விபரம் போன்ற தகவல்களை mwkathmandu@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரியில் மலேசிய தூதரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அந்த இயற்கை சீற்றத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 160-ஐத் தாண்டியுள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணிகள், பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் நிலை குறித்து தெரியவில்லை.

காணாமல் போனவர்களில் குறைந்தது 142 பேர் இந்திய நாட்டவர்கள் ஆவர்.
பனிப்பாறைகளின் சரிவை அடுத்து பெருக்கெடுத்த வெள்ளத்தில், கிராமங்கள், பாலங்கள், மின் கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாளம், சீனா இடையிலான எல்லைக்கு அருகில் நேற்று உள்நாட்டு நேரப்படி காலை மணி 8.37-க்கு 5. 2 மேக்னிடியூட்டாகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அதன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து துணைக்கோளப் படங்களையும் அதிர்வலைகளையும் கொண்டு மேற்கொண்ட துல்லிய ஆய்வில், பனிப்பாறைகள் சரிந்ததால் அந்த அதிர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. அது நிலநடுக்கம் அல்ல எனவும் உறுதிச் செய்யப்பட்டது.
பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் வெள்ளத்தை அடுத்து 19 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதோடு, 40 கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலை சேதமடைந்திருப்பதாக, காத்மாண்டு போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.








