ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 — ஷா ஆலாமில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம், பகடிவதை இல்லை என சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPNS) தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் என தெரிய வந்துள்ளது.
மேலும், இதில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை இயக்குநர் டத்தின் வான் நோர் அஷிகின் அபு காசிம் தெரிவித்தார்.
இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், முழுமையான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக, ஷா ஆலமில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அவரது தலை மற்றும் காதுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக வான் நோர் அஷிகின் தெரிவித்தார். மாணவரை பள்ளி முதல்வர் நேரில் சென்று சந்தித்ததுடன், அவருக்கு ஆலோசனைச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், மேல் விசாரணைக்காக இந்த வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.







