
ஷா ஆலாம், ஆகஸ்ட் 16 : வெறும் பதக்க எண்ணிக்கைக்காக மட்டும் சுக்மா, பாரா சுக்மா போட்டிகள் நடத்தப்படவில்லை. நம்பிக்கை, தைரியம் மிகுந்த தலைமுறையினரை உருவாக்கும் களமாக அந்த போட்டிகள் திகழ்வதாக , சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார்.
பல்வேறு பின்னனிகளைக் கொண்ட விளையாட்டாளர்களின் பலத்தைச் சோதிக்கும் களமே இந்த விளையாட்டுப் போட்டி. இப்போட்டிகள் மரியாதையை இழக்காமல் ஆரோக்கியத்துடன் போட்டியாளர்கள் களம் காண வித்திடுகிறது.
" வெற்றிப் பெற கட்டொழுங்குத் தேவை என கற்றுத் தருவது விளையாட்டு. தோல்வி கண்டால் மீண்டும் எழ வைப்பதும் இந்த விளையாட்டே .
களத்தில் வெவ்வேறு மாநில அடையாளங்களுடன் விளையாட்டாளர்கள் களமிறங்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் விடாமுயற்சி, சிறந்ததை வழங்க வேண்டும் என்ற ஊக்கம் ஆகிய பண்புகளால் ஒன்றுபடுகின்றனர்" என அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

நேற்று இரவு ( சனிக்கிழமை) ஷா ஆலாம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 2026 சுக்மா, பாரா சுக்மா போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்மா மீண்டும் சிலாங்கூருக்குத் திரும்பியிருப்பது, இம்மாநிலத்திற்கு மீண்டும் உபசரணை அணியாகும் வாய்ப்புத் திரும்பியதாக மட்டும் அர்த்தமாகாது.
மாறாக, இளையோர் தங்களது ஆற்றலைச் சோதிக்கும் சிறந்த களத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கடப்பாட்டினை அந்த வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதாக அமிரூடின் ஷாரி கூறினார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சுக்மா போட்டியின் கடந்த வெற்றியாளரான சரவாக் 76 தங்கப் பதக்கங்களைக் குவித்தது. 75 தங்கப் பதக்கங்களுடன் கூட்டரசுப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், 56 தங்கப் பதக்கங்களுடன் சிலாங்கூர் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.








