ஷா ஆலம், ஆகஸ்ட் 15 — பூச்சோங், தாமான் பெரிண்டுஸ்திரியான் தொழில்ற் துறைப் பகுதியில் உள்ள வாகனப் பட்டறைகளைச் சுற்றி நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த பழைய , சேதமடைந்த வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டதை அடுத்து , அந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
சுபாங் ஜெயா மாநகராட்சியின் (MBSJ) அமலாக்க நடவடிக்கையில் அந்த வாகனங்கள் அகற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையில், மாநகராட்சியின் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், சில வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதாக MBSJ தெரிவித்தது.
எச்சரிக்கை நோட்டீஸ் பெற்றுள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை உடனடியாக அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றுமாறு MBSJ அறிவுறுத்தியது.
அதேவேளையில், வாகனப் பட்டறை உரிமையாளர்கள் தங்களது வளாகங்களுக்குள் பழைய, சேதமடைந்த வாகனங்களை நீண்ட காலத்துக்கு குவித்து வைக்க வேண்டாம் என்றும் MBSJ அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு கைவிடப்பட்ட வாகனங்கள் வளாகத்தின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடமாகவும் மாறக்கூடும் என மாநகராட்சி தெரிவித்தது.







