புத்ராஜெயா, ஆகஸ்ட் 15 — மூன்றாம் கட்ட ‘ ரஹ்மா’ உதவித் தொகை இன்று முதல், கட்டம் கட்டமாக 53 லட்சம் பேருக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
இதற்காக அரசாங்கம் 120 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் STR உதவியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக இருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று லட்சம் பேர் இணைந்துள்ளதாக நிதி அமைச்சு கூறியது.

மூன்றாம் கட்ட STR உதவித் தொகை, மக்களின் வருமானம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 150 ரிங்கிட் முதல் 600 ரிங்கிட் வரை வழங்கப்படும். தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு 150 ரிங்கிட் வழங்கப்படும்.
இதனிடையே, 2026 -ஆம் ஆண்டின் முதல் மூன்று கட்டங்களுக்கான STR நிதியுதவி மொத்தம் 360 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.
வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மூன்றாம் கட்ட STR உதவித் தொகை இன்று முதல் நேரடியாக அவர்களது கணக்குகளில் சேர்க்கப்படும் .

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் நாடு முழுவதும் உள்ள Bank Simpanan Nasional (BSN) கிளைகளில் பணமாக தங்களுக்கான உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகளை அதிகாரப்பூர்வ STR இணையத்தளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
STR உதவி தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.







