ஷா ஆலம், ஆகஸ்ட் 9 : சிலாங்கூரில் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள 76 சட்டவிரோதக் குப்பை கொட்டும் தளங்களில், குறிப்பாக இந்தச் செயலுக்கு முக்கிய இடமாக இருக்கும் பகுதிகளில், அடிக்கடி கண்காணிப்பதும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை தடுப்பு, கண்காணிப்பு, தூய்மைப்படுத்துதல் , அமலாக்கம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மாநில அரசின் ஒரு விரிவான அணுகுமுறையின் பகுதியாகும் என ஊராட்சித் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ எங் சுயி லிம் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டப்படும் இடங்கள் அல்லது 'ஹாட்ஸ்பாட்' (Hotspot) என அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு தற்போது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஊராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், அடிக்கடி கண்காணிப்பது, தூய்மைப்படுத்துவது மற்றும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"அதே நேரத்தில், குற்றங்களைக் கண்காணிக்கவும், கண்டறியவும் , சட்டவிரோதக் குப்பை கொட்டும் ஹாட்ஸ்பாட் இடங்களில் மறைக்காணிகளின் (CCTV) பயன்பாட்டை மாநில அரசு விரிவுபடுத்தி வருகிறது.
அத்துடன், PBT, கே.டி.இ.பி கழிவு மேலாண்மை (KDEB Waste Management), மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் தொடர்புடைய அமலாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் வலுப்படுத்தி வருகிறது.
மாநில அரசின் அணுகுமுறை என்பது குப்பைகளைக் கொட்டிய பிறகு அதைத் தூய்மைப்படுத்துவது மட்டுமல்ல.
தூய்மைப்படுத்தப்பட்ட இடங்கள் மீண்டும் சட்டவிரோதக் குப்பை கொட்டும் தளங்களாக மாறாமல் இருக்க, இந்தச் சட்டவிரோதக் குப்பை கொட்டும் சுழற்சியை முழுமையாக உடைப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்," என்று எ ங் சுயி லிம் 'மெட்ரோ அஹாட்' (Metro Ahad) நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருந்தார்.







