
ஷா ஆலாம், ஆகஸ்ட் 5 — 2026ஆம் ஆண்டு சுக்மாவில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கை, தகுதிப் புள்ளி (merit) அடிப்படையில் கடுமையான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என் சிலாங்கூர்) நடத்தும் இந்தத் தேர்வு முறை, உயர்ந்த அளவிலான ஒழுக்கத்தை வெளிப்படுத்தி, அவசியமான பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாடத் தொகுதிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
தற்போது நாங்கள் செயல்திறன் அடிப்படையிலான தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும், பயிற்சியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் தங்களது உடல் தகுதியைப் பேணிக் காக்க வேண்டும்.
எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை 22ஆவது சுக்மா விளையாட்டுப் போட்டி சிலாங்கூரில் உள்ள 9 மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, பாரா சுக்மா விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெற உள்ளன.







