அமெரிக்கா, ஜூலை 31 - அமெரிக்காவில் சீனாவின் மனித உருவ ரோபோக்களின் பயன்பாட்டிற்கு அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு 'ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தை' விளைவிப்பதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் சீனா தயாரிப்பு தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் வெளிப்பாடாகவே இந்த முக்கிய முடிவு பார்க்கப்படுகிறது.
மத்திய தகவல் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தடையானது 'வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட ரோபோடிக் சாதனங்கள்' அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
குறிப்பாக, மனித உருவ ரோபோக்கள் மற்றும் விலங்குகளைப் போன்ற நான்கு கால்களைக் கொண்ட ரோபோக்கள் ஆகிய இரண்டும் இந்தக் வகைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மேம்பட்ட ரோபோடிக் சாதனங்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், தீய நோக்கம்கொண்ட நபர்களால் அமெரிக்க மக்களை உளவு பார்க்கவும், வெளிநாட்டு உளவுப் பிரிவுகளின் திறன்களை மேம்படுத்தவும் அல்லது ரோபோக்களைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தவும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்தார்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்ப உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவிற்கே மாற்ற வேண்டும் என்ற டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை வலுப்படுத்துகின்றன.
கடந்த வாரம், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட சில இராணுவத் தர ட்ரோன்களின் இறக்குமதியைத் தடை செய்வதற்கான பரிந்துரைக்கு மத்திய தகவல் தொடர்பு ஆணையம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது. குறிப்பாக இது சீனா தயாரிப்புப் பொருட்களை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பல சீன தயாரிப்பாளர்களிடமிருந்து கூடுதல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தத் தடையானது கடந்த ஜூலை 16-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







