ஷா ஆலாம்,ஜூலை 28: யாயாசான் மந்திரி பெசார் சிலாங்கூர் (Yayasan MBI) அறக்கட்டளை, 28 பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் மடிக்கணினிகளை வழங்கியது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த கற்றல் வசதிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான வருடாந்திர முயற்சி இதுவென சிலாங்கூர் மெந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அகமட் அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

இங்குள்ள் டாரூல் ஏசான் கட்டிடத்தில் நடைபெற்ற மடிக்கணினி ஒப்படைப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"மாநில சட்டமன்ற சேவை மையங்களிலிருந்தும் எங்களுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவே மாணவர்களிடம் நேரடியாக ஒப்படைப்பதற்காக மடிக்கணினிகளை அவர்களிடம் வழங்கியுள்ளோம்.
மாணவர்களுக்கு மடிக்கணினி மட்டுமன்றி, ஒரு வருடத்திற்கான இலவச சிலாங்கூர் இணையத் தரவும் (Data Internet Selangor) வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகக் கல்விக்காக இந்த உதவியை அவர்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்," என அகமட் அஸ்ரி ஜைனல் தெரிவித்தார்.
மேலும், இந்த கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"இவ்வாண்டு எங்களுக்குப் பல விண்ணப்பங்கள் கிடைத்தன. ஆனால், குடும்ப வருமானம் RM4,000-க்கு கீழ் இருக்க வேண்டும் மற்றும் சிலாங்கூர் மாநில அரசின் கீழ் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து, பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) பயில்பவராக இருக்க வேண்டும் என்பதே இதற்கான தகுதிகளாகும்.
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வரை, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எங்களால் முடிந்தவரை உதவ முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
இந்த மடிக்கணினி உதவியைப் பெற்றவர்களில் 18 வயது மாணவி இஷ்வீனா வில்லியம் ராபர்ட் -டும் அடங்குவார்.
இனி விரிவுரையாளர்கள் கொடுக்கும் பணிகளைச் செய்ய தனது அறைத் தோழியிடம் மடிக்கணினியை இரவலாக வாங்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார்.









