ஷா ஆலாம், ஜூலை 25 : பள்ளி மாணவர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து, மூன்று இடைநிலைப்பள்ளி மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
தொடக்க விசாரணையில் அந்தச் சம்பவம் நேற்று மதியம் 12.30 மணியளவில் அம்பாங், ஸ்ரீ நிலாம் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் F படிக்கட்டுக்கு கீழ் நடந்ததாக தெரியவந்திருப்பதாக, அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவருடைய காதலியைப் பாதிக்கப்பட்ட மாணவர் தொந்தரவு செய்ததால் இந்த அடிதடி நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவரை மற்றொரு மாணவர் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததாகவும், அதன் பின்னர் அங்கு வந்த மூன்று சந்தேக நபர்கள் அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட மாணவரின் முகத்தில் அறைந்து, அவரை உதைக்கவும் செய்துள்ளனர் என்று அசாம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதோடு ஒரே பள்ளியில் படிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தை வேறொரு மாணவர் தனது கைபேசியில் பதிவு செய்து வாட்ஸ்அப் குழுவில் பகிந்தப் பின்னர், பேஸ்புக்கிலும் பதிவேற்றப்பட்டது.
கலகம், பகடிவதை தொடர்பில், தண்டனைச் சட்டத்தின் 147 மற்றும் 507B பிரிவுகளின் கீழ் போலீசார் இச்சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.







