பட்டர்வொர்த், ஜூலை 25 : உணவக நடத்துநர்கள் எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காண, தமது அமைச்சரவைக்கு திங்கட்கிழமை முதல் ஒரு மாத காலம் அவகாசம் அளித்திருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அமைச்சர் ஒருவர் மூலம் உணவகத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை குறித்த கவலை தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
" வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்புக்காக அரசாங்கம் "கதவுகளை முழுமையாகத் திறந்துவிட" முடியாது ; இருப்பினும், உணவகத் துறை உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அவசரத் தேவை இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளேன்." என்று பிரதமர் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம், மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (Presma), தொடரும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை நிவர்த்தி செய்ய 15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்குமாறு அரசாங்கத்திற்கு மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தது.
முன்னதாக அன்வார் இப்ராஹிம், இந்திய முஸ்லிம் சமூகத்திற்கான திட்டவரைவை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார்.
அந்நிகழ்ச்சியின் போது, பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்துள்ளவர்கள் உட்பட நலிவடைந்த இந்திய முஸ்லிம் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் 20 லட்சம் ரிங்கிட் கல்வி உதவித்தொகை வழங்கப்படுமென பிரதமர் அறிவித்தார்.






