கோலாலம்பூர்,ஜூலை 16 - ஹாங்காங்கில் கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா பூக்களுடன் கைது செய்யப்பட்ட மலேசிய இளைஞர், அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலால் 'பகடைக்காயாக' (Drug Mule) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சரவாக்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டதை ஹாங்காங் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
முதற்கட்ட சோதனையில் அந்த இளைஞருக்கு மலேசியாவில் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி ஹாங்காங் விமான நிலையத்தை சென்றடைந்த போது, அந்த இளைஞரின் துணிப் பையை சோதனையிட்ட ஹாங்காங் சுங்கத்துறையினர், போதைப் பொருளைக் கண்டெடுத்தனர்.
ஹாங்காங் சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், அந்த இளைஞர் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் வந்துள்ளார் என்றும், சுங்கப் பரிசோதனையின் போது அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்து 60,000 ரிங்கிட்டாகும்.





