கோலாலம்பூர், ஜூலை 15: டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் சூப்பர் 750 (Japan Open Super 750) பூப்பந்து தொடரின் முதல் சுற்றிலேயே, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனைகளான மலேசியாவின் பியர்லி டான் - எம். தீனா இணை அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இத்தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மலேசியாவின் இந்த நட்சத்திர இணை, இம்முறை தைவான் இணையிடம் வீழ்ந்தது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் செட்டை மலேசிய இணை 21-9 என்ற கணக்கில் மிக எளிதாகக் கைப்பற்றி வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
எனினும், ஆட்டத்திற்குள் பலமாக மீண்டு வந்த உலகத் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் தைவான் வீராங்கனைகள், அடுத்தடுத்த இரண்டு செட்களையும் 21-17, 21-17 என்ற கணக்கில் கைப்பற்றி பியர்லி - தீனா இணையின் சாம்பியன் பட்டக் கனவைத் தகர்த்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு, ஒரு திறந்தநிலை (Open) போட்டியில் பியர்லி - தீனா இணை முதல் சுற்றிலேயே வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
அதுமட்டுமின்றி, தைவானின் இந்த இணைக்கு எதிராக இதற்கு முன் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் மலேசிய இணையே வெற்றி பெற்றிருந்த வேளையில், தற்போதைய இந்தத் தோல்வி எதிர்பாராத ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
கடந்த முறை நூலிழப்பில் தவறவிட்ட ஜப்பான் ஓபன் பட்டத்தை இம்முறை வெல்ல வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் களம் கண்ட பியர்லி - தீனா இணைக்கு இத்தோல்வி பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.







