புத்ராஜெயா, ஜூலை 13 – மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருந்த நம்பிக்கை மோசடி, சொத்து துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
அர்மடா (Armada) இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான நிதி தொடர்பான இந்த வழக்கில், 33 வயதான சையத் சாடிக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்த இறுதி மேல்முறையீட்டு மனுவை, 2-1 என்ற பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, 2023 நவம்பர் 9 அன்று உயர் நீதிமன்றம் சையத் சாடிக்கிற்கு வழங்கியிருந்த தண்டனையை எதிர்த்து அவர் செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், கடந்த 2025 ஜூன் 25 அன்று அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 2 பிரம்படிகள் மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த விடுதலைத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த நாளே அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்ப்பின் மூலம், சையத் சாடிக் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன் அவரது விடுதலையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.







