ஷா ஆலாம், ஜூலை 8 - கேரி தீவில் (Pulau Carey) கிள்ளான் துறைமுகத்தின் மூன்றாவது முனையத்தை (Third Terminal) உருவாக்குவதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கடல்சார் மையமாக உருவெடுக்க மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த மெகா திட்டம் முழுமையாக நிறைவடைய கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் நாட்டின் கடல்சார் போட்டித்திறன் வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காகப், பல கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தற்போது கிள்ளான் துறைமுகம் ஆண்டுக்கு 15.14 மில்லியன் இருபது அடி இணையான அலகுகள் (TEUs) சரக்குக் கொள்கலன்களைக் கையாளும் திறன் கொண்டது. இது ஆண்டுக்கு 60 மில்லியன் TEUs கையாளக்கூடிய சிங்கப்பூரின் துவாஸ் (Tuas) துறைமுகத்துடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகும்.
2018-இல் தொடங்கப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility study) தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், பொது-தனியார் கூட்டுத் திட்ட (PPP) மாதிரியின் கீழ் இத்திட்டத்தைத் தொடர அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது சிலாங்கூர் மாநில அரசுடன் நிலம் தொடர்பான சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவை முடிந்தவுடன் மிக விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும் என்றும் அந்தோணி குறிப்பிட்டார்.





