ஷா ஆலாம், ஜூலை 5 — அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ), சொத்து உரிமையாளர்களின் வரி நிலுவைகளைத் தீர்ப்பதற்காக தாமான் மெலாவதி (Taman Melawati) மற்றும் உலு கிள்ளான் (Hulu Kelang) ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மதிப்பீட்டு வரி வசூலிப்புக்கான பேச்சுவார்த்தையிலும் கட்டண வசூல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
RM10,000-க்கும் அதிகமான வரி நிலுவை வைத்துள்ள 26 தளங்களுக்கு தங்களது நடவடிக்கைக் குழு நேரில் சென்றதாக அம்மன்றம் தெரிவித்தது.
இந்த தளங்களின் ஒட்டுமொத்த செலுத்தப்படாத வரித் தொகை 3 லட்சத்து 77 ஆயிரத்து 752 ரிங்கிட் 28 சென்னாகும்.
இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மொத்த நிலுவைத் தொகையில் நான்கு சதவீதத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 16 ஆயிரம் ரிங்கிட் தொகையை வெற்றிகரமாக வசூலித்துள்ளதாக அம்மன்றம் தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகள் பல சவால்களையும் எதிர்நோக்கினர். அவற்றில் எட்டு வீடுகள் காலியாக இருந்ததோடு, சொத்து உரிமையாளர்கள் ஒத்துழைக்க மறுத்ததும் அடங்கும்.







