ஷா ஆலம், ஜூன் 10 – அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிஏஜே ) கட்டடம் மற்றும் கட்டிடக்கலைத் துறை, கம்போங் கோலா அம்பாங்கில் உள்ள ஜாலான் எம்பூன் சாலை ஓரத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த சேமிப்புக் கிடங்கு போன்ற ஒரு தற்காலிகக் கட்டட அமைப்பை நேற்று காலை இடித்து அகற்றியுள்ளது.
பொது இடங்களை ஆக்கிரமித்து, அப்பகுதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதக் கட்டடங்களைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் நேற்று இரவு வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதையும், மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று நகராண்மைக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் முறையான ஒழுங்குமுறையுடனும், நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டும் அமைவதை உறுதி செய்யும் பொருட்டு, இது போன்ற கண்காணிப்புகளும் அமலாக்க நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் எம்பிஏஜே எச்சரித்துள்ளது







