கிகாலி, ஜூலை 4: காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) இபோலா (Ebola) வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மே 15ஆம் தேதி இந்த இபோலா பரவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,406 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 438 மரணங்கள் அடங்கும் என்பதோடு, இதன் இறப்பு விகிதம் 31.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இந்நோய் பரவலானது தற்போது இத்தூரி (Ituri), வட கிவு (North Kivu) மற்றும் தென் கிவு (South Kivu) ஆகிய மாகாணங்களில் உள்ள 34 சுகாதார மண்டலங்களில் தீவிரமாகப் பரவியுள்ளது.
இதுவரை குறைந்தது 192 நோயாளிகள் இதிலிருந்து குணமடைந்துள்ள வேளையில், மேலும் 609 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 'பண்டிபுகியோ' (Bundibugyo) எனப்படும் இந்த இபோலா வகைக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்குப் பாதுகாப்பு குறைபாடுகள், மக்களின் இடப்பெயர்வு, உள்ளூர் சமூகத்தினரின் எதிர்ப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணிகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கையாள்வதற்காக, கொங்கோ அதிபர் ஃபெலிக்ஸ் ஷிசெகெடி (Felix Tshisekedi) இந்த வாரத் தொடக்கத்தில் 319 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அவசரக்கால இபோலா தடுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.







