ஷா ஆலாம், ஜூன் 29: புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தனது தொகுதி மக்களுக்காக முன்னெடுத்து வரும் பல்வேறு வகையான சமூக நலத் திட்டங்கள் குறித்தப் பதிவு ஒன்று, 'த்ரெட்ஸ்' (Threads) சமூக ஊடகத்தில் வைரலாகி, மலேசியர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன், தங்களின் சேவை மையம் ஒவ்வொரு மாதமும் இத்தகைய சமூகத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றித் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
தங்களின் தொகுதியில் வாழும் பல்லின மக்களின் மாறுபட்ட தேவைகளையும் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, இயன்றவரை அதிகப்படியான மக்கள் இதன் மூலம் பயனடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் பன்முகப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பல்வேறு வயதினரையும், வெவ்வேறான பின்னணியைக் கொண்ட பொதுமக்களையும் நேரடியாகச் சென்றடைந்து அவர்களை இத்தகைய சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு இந்த மாறுபட்ட திட்டங்கள் தங்களுக்குப் பெரிதும் உதவுவதாகவும் அவர் விவரித்தார்.
அனைத்து வயதினரின் தேவைகளையும் முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருங்கியத் தொடர்புடைய ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்துவது, மக்களிடையே சமூகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கான ஒரு மிகச்சிறந்த உந்துதல் என்று பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.







