பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 - அரசு ஊழியர்கள் வாரத்தில் இரு நாள்கள் வீட்டிலிருந்து அல்லது அலுவலகத்திற்கு வெளியிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனுமதி ஆகஸ்ட் முதலாம் தேதி அமலுக்கு வருவதாக பொதுச் சேவைத் துறை ( JPA ) அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
வாரத்தில் இரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையில் மூன்று நாள்கள் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும். இனி இந்த அனுமதி அரசு ஊழியர்களின் புதிய வேலை நடைமுறையாக அமையுமென JPA குறிப்பிட்டது.
அந்த புதிய நடைமுறையின் கீழ், பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அலுவலகத்திற்கு வர வேண்டும். வெள்ளிக்கிழமையை வார இறுதி விடுமுறையாக அனுசரிக்கும் கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் ஞாயிறு, வியாழன் ஆகிய தினங்களில் கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டும்.
எனினும், ஊழியர்கள் வேலையிடம் அவசியம் செல்ல வேண்டிய சுகாதாரம், தற்காப்பு, கல்வி, பாதுகாப்பு, நீதிமன்றம் ஆகிய துறைகள் வழக்கம்போல் செயல்படும்.
மேலும், இந்த புதிய வேலையிட நடைமுறை மக்களுக்கான முக்கிய சேவைகளை ஒருபோதும் பாதிக்காது என JPA தெரிவித்தது.






