ஷா ஆலம், ஜூன் 22 - வணிக மேம்பாட்டுக்கான 2025ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத் திட்டமிடல் வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள, ஹலால் மற்றும் ஹலால் அல்லாத கழிவுகளைத் தனித்தனியாகப் பிரிப்பது தொடர்பான விதிகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இங் சுய் லிம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கழிவுப் பிரிப்புக் கொள்கையானது முற்றிலும் புதிய ஒன்றல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஹலால் நிலையின் அடிப்படையில் கழிவுகளைப் பிரிப்பதற்கான தேவைகள் கடந்த 2010ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் உள்ள சில விதிகள் பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட புரிதல்களையும், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த பல கேள்விகளையும் எழுப்பியுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் இந்த மறுஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழிகாட்டுதல்கள், 2025ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில நகர்ப்புற திட்டமிடல் வழிகாட்டுதலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஆறு தொகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.







