வறுமையை ஒழிப்பதில் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி சாதனை

15 ஜூன் 2026, 12:45 AM
வறுமையை ஒழிப்பதில் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி சாதனை

ஷா ஆலம், ஜூன் 15 – சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் வறுமையை ஒழிப்பதில் ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி மிகச் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது.

கடந்த மே 31ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, அந்தத் தொகுதியில் மொத்தம் 1,661 குடும்பங்கள் வறுமை மற்றும் கடுமையான வறுமைக் கோட்டிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த மகத்தான வெற்றி குறித்து ஊடகங்களிடம் பேசிய ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா, தற்போது தனது தொகுதியில் ‘கடுமையான வறுமை’ (Miskin Tegar) என்ற நிலை முற்றிலும் பூஜ்ஜியமாக்கப்பட்டு, ஒழிக்கப்பட்டுவிட்டதாகத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும், தற்போது மாத வருமானம் 2,830 ரிங்கிட்டிற்கும் குறைவாகப் பெறும் ‘வறுமை’ பிரிவில், வெறும் 338 குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சாதனை சும்மா கிடைத்துவிடவில்லை என்று கூறிய டாக்டர் ஃபஹ்மி, சிலாங்கூர் சக்காட் வாரியம், சமூக நலத்துறை, பெட்டாலிங் மாவட்ட அலுவலகம், பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு மற்றும் ஸ்ரீ செத்தியா தொகுதி சேவை மையம் ஆகிய பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியே இதற்குக் காரணம் என்றார்.

உதவி தேவைப்படும் மக்களைத் தேடிக் கண்டறிந்து களப்பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள முக்கிய உத்தி குறித்து விவரித்த அவர், ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீ செத்தியா தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிப் பகுதிகளிலும் நடத்தப்படும் ‘நகரும் சேவை மைய’ (Pusat Khidmat Bergerak) திட்டமே இதற்கு மிக முக்கியக் காரணியாக அமைந்தது என்றார்.

தங்களின் சேவை மையம் நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று, உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ததாக அவர் விளக்கினார்.

தகுதி இருந்தும், அரசாங்க மற்றும் சக்காட் உதவிகளை எப்படிப் பெறுவது என்று தெரியாமல் தவித்த பல குடும்பங்களுக்குத் தங்களின் குழுவினர் வழிகாட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர், வேலை தேடும் வரை அல்லது நிலையான வருமானம் கிடைக்கும் வரை தற்காலிகமாகச் சமாளிக்கச் சில குடும்பங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் (One-off) நிதியுதவிகளும் வழங்கப்பட்டதாகக் கூறினார்.

வறுமைக் கோட்டிலிருந்து மக்கள் வெளியேறிவிட்டாலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்துவதற்கும், அவர்களின் பொருளாதார நிலை மீண்டும் சரிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் தொடர் முயற்சிகள் அவசியம் என்று டாக்டர் ஃபஹ்மி வலியுறுத்தினார்.

ஸ்ரீ செத்தியா தொகுதியில் உள்ள அன்பான சமூகமும், அக்கறையுள்ள தனிநபர்களும் வறியவர்களுக்கு உதவுவதில் எப்போதும் முன்னிற்பது தங்களின் கூடுதல் பலம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அரசாங்க முகமைகள், சக்காட் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரிடையே நிலவும் இத்தகைய வலுவான ஒத்துழைப்பு மக்களின் நல்வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஸ்ரீ செத்தியா தொகுதியே சிறந்த உதாரணம் என்றும், இதே அணுகுமுறையைச் சிலாங்கூரின் மற்ற தொகுதிகளிலும் விரிவுபடுத்தலாம் என கூறி முகமட் ஃபஹ்மி ஙா கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.