கோலாலம்பூர், ஜூன் 9: ஆறாம் படிவத்தின் கல்வித் தரத்தை உயர்த்த மடாணி அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் மறுபெயரிடல் நடவடிக்கைகளும், பல்வேறு முன்முயற்சிகளும் இதற்குச் சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆறாம் படிவக் கல்வி மிகவும் சிறப்பானது என்றும், தங்களுக்கு மிகவும் நெருக்கமானது என்றும் அவர் கூறினார். பிற கல்விக்கு இணையாக ஆறாம் படிவக் கல்வியின் அமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான மறுபெயரிடல் நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய பல்வேறு முன்முயற்சிகள் இத்திட்டத்தின் தரத்தை தொடர்ந்து உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.
பள்ளி முன்பண உதவி, தேசிய ஆறாம் படிவ மாணவர் பிரதிநிதித்துவக் குழுவை நிறுவுதல் மற்றும் பொது உயர்கல்வி நிறுவனங்களுடன் மூலோபாய ஒத்துழைப்பு போன்ற முன்முயற்சிகள் ஆறாம் படிவ மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே செயல்படுத்தப்படுகின்றன என்று ஃபட்லினா சிடேக் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
மலேசிய எஸ்.டி.பி,எம் சான்றிதழ் (STPM) அதிக மதிப்புமிக்கது என்பதோடு தேசிய அளவிலும், 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, நெகிரி செம்பிலானின் கோலா பிலாவில் உள்ள துவான்கு முகம்மட் தேசிய இடைநிலைப் பள்ளியில் புதிதாகப் பதிவு செய்த ஆறாம் படிவ மாணவர்களை அவர் நேரில் சந்தித்தார்.
மாணவர்களை வாழ்த்திய அவர், "அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். சாதனைச் சிகரத்தை எட்டுவதற்கான உங்களின் முயற்சியில் நீங்கள் அனைவரும் இப்போது மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்து வைத்துள்ளீர்கள்," என்று உற்சாகப்படுத்தினார்.







