கோம்பாக்கில் குற்றச் செயல்கள் 24 சதவீதம் சரிவு; குற்றத் தடுப்பு வியூகங்கள் பலனளித்தன

5 ஜூன் 2026, 3:01 AM
கோம்பாக்கில் குற்றச் செயல்கள் 24 சதவீதம் சரிவு; குற்றத் தடுப்பு வியூகங்கள் பலனளித்தன

ஷா ஆலம், ஜூன் 5: நடப்புண்டின் முதல் ஆறு மாதங்களில் கோம்பாக் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களின் குறியீடு 24 சதவீதம் குறைந்துள்ளது. கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகம் (IPD Gombak) மேற்கொண்ட சிறப்பான குற்றத் தடுப்பு மற்றும் மேலாண்மை வியூகங்களின் வெற்றியையே இது காட்டுகிறது.

இந்தச் சாதனையின் மூலம் கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகம் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத முக்கியச் செயல்திறன் குறியீட்டு (KPI) இலக்கை அடைந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

"இந்த மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத இலக்கை அடைந்ததன் மூலம், முதல் அரையாண்டில் குற்றக் குறியீடு 24 சதவீதம் குறைந்துள்ளது என்ற குறிப்பிடத்தக்க நற்பலன் கிடைத்துள்ளது.

"குற்றங்களைத் தடுப்பதில் காவல்துறை அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் விளைவாக அமல்படுத்தப்பட்ட குற்ற மேலாண்மை அணுகுமுறைகள் மற்றும் வியூகங்களின் செயல்திறனை இந்த வெற்றி நிரூபிக்கிறது," என்று அவர் கூறினார்.

நேற்று கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் மற்றும் கோம்பாக் காவலர் குடும்பச் சங்கத்தின் (பெர்கெப் - PERKEP) தலைவர் ஆகியோருக்கான பொறுப்பு ஒப்படைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகத்தை வழிநடத்தி, பல்வேறு பெருமைக்குரிய சாதனைகளைப் படைத்த மூத்த உதவி ஆணையர் (SAC) நூர் அரிஃபின் முகமட் நாசிரின் சேவைக்கும் பங்களிப்பிற்கும் டத்தோ ஷாசெலி கஹார் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

குற்ற விகிதக் குறைவு உள்ளிட்ட சாதனைகள், பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணிக் காப்பதில் முழு கோம்பாக் காவல் தலைமையகத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

அதே வேளையில், புதிய மாவட்டக் காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்கும் உதவி ஆணையர் (ACP) இப்ராஹிம் உசேன், தனது பரந்த அனுபவம் மற்றும் முந்தைய சேவைப் பதிவுகளின் அடிப்படையில் இந்தச் சிறப்பான பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்தச் சிறந்த செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதை உறுதிசெய்ய, கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகத்தின் புதிய தலைமை, இன்னும் உயர்ந்த KPI இலக்கை நிர்ணயித்து, குற்றத் தடுப்பு முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷாசெலி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில், கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் பொறுப்பை நூர் அரிஃபின், இப்ராஹிமிடம் ஒப்படைத்தார். அதேபோல், கோம்பாக் பெர்கெப் அமைப்பின் தலைவர் பொறுப்பு நூர் அசிமா முகமட் அக்பாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த மே 5-ஆம் தேதி, மலேசிய அரசுக் காவல்துறை (PDRM) அறிவித்த 19 மூத்த அதிகாரிகளின் இடமாற்றத்தில், நூர் அரிஃபின் புக்கிட் அமான் நிர்வாகப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநராக (SAC தகுதியில்) பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக, இதற்கு முன் உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவராகச் செயலாற்றிய இப்ராஹிம் தற்போது கோம்பாக்கின் புதிய காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.