மழலையர் பள்ளி மாணவர்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் புத்தக நிதி: வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் கல்வி அமைச்சு

3 ஜூன் 2026, 8:29 AM
மழலையர் பள்ளி மாணவர்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் புத்தக நிதி: வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் கல்வி அமைச்சு

ஷா ஆலம், ஜூன் 3: நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (Prasekolah) தரமான வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 மில்லியன் ரிங்கிட் வரையிலான நிதியுதவி, குழந்தைகளிடையே சிறு வயது முதலே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க பெரிதும் துணைபுரியும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

பள்ளி நூலகங்கள், கல்வி வள மையங்கள் மற்றும் வாசிப்பு ஊக்குவிப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் கல்வியை வலுப்படுத்த கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கை மேலும் வலுசேர்க்கும் என்று பெரித்தா ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று விஸ்மா டேவான் பஹாசா டான் புஸ்தாகாவில் (DBP) நடைபெற்ற, 'நூலகவியல், மொழிபெயர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான 2026-ஆம் ஆண்டு சர்வதேச கருத்தரங்கை' (LiTr.AI 2026) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சார்பில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துப் பேசிய கல்வி அமைச்சர், குழந்தைகள் தங்களின் வாழ்நாள் முழுவதும் அறிவைத் தேடவும், கற்கும் சூழலை உருவாக்குவதற்கும் ஏதுவாக ஆரம்பக் கல்வி நிலையிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

எனவே, இந்த வாசிப்புப் பண்பானது இளம் வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, கடந்த மே 16-ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் போது உரையாற்றிய ஃபட்லினா, நாடு முழுவதும் உள்ள 10,515 மழலையர் பள்ளி வகுப்புகளுக்குக் கூடுதல் வாசிப்புப் பொருட்களை வழங்குவதற்காக 10.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முயற்சிகளுக்கு இணங்க, சிறுவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மழலையர் பள்ளி பாடத்திட்டத்தில் 'ஒன்றாக வாசிப்போம்' (Baca Bersama) என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விவரித்தார்.

அதே வேளையில், கல்வி அமைச்சு 'பாகாட்' (PAKAT) என்ற புதிய கூட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், வாசிப்புப் பழக்கத்தை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றுவதில் பெற்றோர்கள், சமூகம் மற்றும் பள்ளிகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

கல்வியை வலுப்படுத்துவது என்பது வெறும் புத்தகங்களை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை, மாறாக மக்கள் வாசிப்பதற்கும், சிந்திப்பதற்கும், கலந்துரையாடுவதற்கும் மற்றும் தொடர்ந்து அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் ஏற்ற ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை (Ekosistem) உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனவே, அறிவார்ந்த மற்றும் போட்டித்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்க, தரமான வாசிப்புப் பொருட்களுக்கான அணுகலும், வாசிப்பு கலாச்சார மேம்பாடும் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இதே வேளையில், மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கும், சமுதாயத்திற்கு அறிவைப் பரப்புவதற்கும் நூலகங்களும் மொழிபெயர்ப்புத் துறையும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை, உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல், நாட்டின் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்த நல்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய தொழில்நுட்பங்களை நமது உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்குவதற்கு, அறிஞர்களும் தொழில்துறை வல்லுநர்களும் ஒன்றிணையும் ஒரு தளமாக இந்த 'லிட்ராய் 2026' (LITRAI 2026) கருத்தரங்கம் திகழ்கிறது என்றும் அவர் விவரித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.