ஷா ஆலம், மே 29 - சிலாங்கூர், தஞ்சோங் சிப்பாட் (Tanjong Sepat) பகுதியில் உள்ள பன்றிப் பண்ணைகளை மூடும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
அங்கு தற்போது வெறும் 11,000 பன்றிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில், இப்பண்ணைகள் அனைத்தும் மிக விரைவில் முழுமையாக மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம், பண்ணைகளை காலி செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நிலைகளில் இன்னும் இயங்கி வரும் சுமார் 30 பண்ணைகள் இந்த மூடல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அங்கு எஞ்சியிருந்த கால்நடைகள் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற முதிர்ச்சியை அடையாமல் இருந்ததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.
தற்போதைய சூழலில், புதிய குட்டிப் பன்றிகள் எதுவும் பண்ணைகளுக்குள் கொண்டு வரப்படுவதில்லை என்றும், எஞ்சியிருக்கும் அனைத்து பன்றிகளும் ரவாங்கில் உள்ள அறுவை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் விரைவில் நிறைவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின் மற்றும் தாம் இணைந்து இது தொடர்பாக அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாக டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
பாதிக்கப்பட்ட 141.6 ஹெக்டேர் பரப்பளவிலான நிலப்பகுதியில், எதிர்காலத்தில் அதிக மதிப்புமிக்க விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு இந்த நிலமாற்ற செயல்முறை மிகவும் இன்றியமையாதது என்று அவர் விவரித்தார்.
மேலும், எதிர்வரும் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்கள் வழங்கவுள்ள நிதியுதவிகள், நிலச் சீரமைப்பு முயற்சிகள் மற்றும் பன்றி வளர்ப்புத் தொழில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 87 பண்ணை உரிமையாளர்கள் மற்ற பொருத்தமான விவசாயத் தொழில்களுக்கு மாறுவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து விரிவாக மறுஆய்வு செய்யப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் கடுமையான அமலாக்கக் கட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஜூன் மாத இறுதிக்குள் தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளும் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்று தெரிவித்திருந்தார்.
பண்ணை உரிமையாளர்கள் தங்களது வியாபாரத்தை முடித்துக் கொள்வதற்கும், தங்களின் எஞ்சிய கால்நடைகளை விற்பனை செய்வதற்கும் மாநில அரசு ஏற்கனவே ஆறு மாத கால அவகாச சலுகையை வழங்கியிருந்தது.
சிலாங்கூர் மாநிலத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பிறப்பித்திருந்த அரச கட்டளைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








