எல்.ஆர்.டி ரயில் தடம் புரண்ட சம்பவம்: விசாரிக்க சிறப்புப் பணிக்குழுவை அமைத்தது போக்குவரத்து அமைச்சு

29 மே 2026, 1:15 AM
எல்.ஆர்.டி ரயில் தடம் புரண்ட சம்பவம்: விசாரிக்க சிறப்புப் பணிக்குழுவை அமைத்தது போக்குவரத்து அமைச்சு

புத்ராஜெயா, மே 29: இன்று காலை அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் இலகுரக ரயில் (LRT) தடம் புரண்ட சம்பவத்தை விசாரிக்க போக்குவரத்து அமைச்சு ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது.

இந்த விசாரணையின் முடிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, கூடிய விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அதே வேளையில், சேவை நடத்துநரான பிரசரானா மலேசியா பெர்ஹாட் (Prasarana) மீது அதிகபட்ச தண்டனை நடவடிக்கை எடுக்குமாறு நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்திற்கு (APAD) உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த சம்பவம் குறித்து APAD உடனடியாக விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது" என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

பிரசரானாவின் இயக்குநர் வாரியம் மற்றும் நிர்வாகக் குழுவினர் வழக்கம் போல் செயல்படும் "business-as-usual" மனப்பான்மையைத் தொடரக் கூடாது என்றும் லோக் வலியுறுத்தினார். இந்த சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து பிரசரானாவின் உயர் நிர்வாகத்தில் உள்ள எவரும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

"பொதுச் சேவைகளின் பாதுகாப்புத் தரத்திலும் நம்பகத் தன்மையிலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது."

"பிரசரானாவின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் அமைப்பின் சேவைகள் மீது பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, தங்கள் பொறுப்புகளில் கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை பிரசரானா இயக்குநர் வாரியம் எடுக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

சான் சாவ் லின் (Chan Sow Lin) நிலையத்திற்கு அருகிலுள்ள தண்டவாளச் சுவிட்ச் (track switch) பகுதியைக் கடக்கும் போது அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித் தடத்தைச் சேர்ந்த ஒரு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தால் ரயில் சேவை அட்டவணை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தண்டவாளச் சுவிட்சில் ஏற்பட்ட பழுது காரணமாகவே ரயில் நகர முடியாமல் தடம் புரண்டதாக ரேபிட் கேஎல் (Rapid KL) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்தபோது ரயிலில் 25 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.