ஷா ஆலம், மே 27: சிலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோதக் கடத்தல் சிகரெட்டுகளை (Rokok Seludup)தொடர்ந்து விற்பனை செய்யும் வணிக வளாகங்களின் உரிமத்தை (Lesen Perniagaan) நேரடியாக ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாநில அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
உள்ளாட்சி மற்றும் சுற்றுலாத்துறைக்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் கூறுகையில், இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போதைய சட்ட விதிகளுக்கு உட்பட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகும் எடுக்கப்படும் என்றார்.
"தொடர்ந்து குற்றங்களைச் செய்து வரும் வணிக வளாகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து மாநில அரசு எப்போதும் ஆராய்ந்து வருகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் வணிக உரிமங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது," என்று நேற்று மீடியா சிலாங்கூரிடம் (Media Selangor) அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் கடத்தல் சிகரெட் விற்பனையைத் தடுப்பதற்காக, கடைகளின் உரிமத்தை ரத்து செய்யும் அதிரடி முடிவுகளை அரசாங்கம் எடுக்குமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, 'வாவாசானெக்ஸ்' (Wawasanex) என்ற சிந்தனைக் குழு (Think Tank) நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், மலேசியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியினர் (63.8 விழுக்காடு) கடந்த 12 மாதங்களில் கடத்தல் சிகரெட்டுகளை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கில் 603 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம், தற்போது சாதாரண மளிகைக் கடைகளிலேயே இந்த கடத்தல் சிகரெட்டுகள் மிக எளிதாகக் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிகரெட்டுகளை வாங்குபவர்களில் 68.8 விழுக்காட்டினர், தங்களுக்கு வெளிநாட்டு வியாபாரிகள் மூலமாகவே இவை கிடைக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். விலை மிகவும் குறைவாக இருப்பதும், மிக எளிதாகக் கிடைப்பதுமே தாங்கள் கடத்தல் சிகரெட்டுகளை வாங்குவதற்குக் காரணம் என்று நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான 'நீல்சன்' (Nielsen) கடந்த ஜனவரியில் நடத்திய முந்தைய ஆய்வில், மலேசியாவில் விற்கப்படும் சிகரெட்டுகளில் 56.7 விழுக்காடு (அதாவது ஒவ்வொரு 10 சிகரெட் பெட்டிகளில் கிட்டத்தட்ட 6 பெட்டிகள்) கடத்தல் சிகரெட்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் மலேசிய அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 2 பில்லியன் ரிங்கிட் வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
இது போன்ற கடத்தல் வழக்குகளைக் கையாள்வதற்கான முதன்மை அதிகாரம், அரச மலேசிய சுங்கத்துறை மற்றும் அரச மலேசிய காவல்துறைபடை (PDRM) போன்ற கூட்டரசு முகமைகளின் கீழ் இருந்தாலும், சிலாங்கூர் மாநில அரசு இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்று டத்தோ இங் சூ லிம் சுட்டிக்காட்டினார்.
"சிலாங்கூர் மாநில அரசு கடத்தல் சிகரெட் விற்பனைப் பிரச்சனையை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளை முழுமையாக ஒடுக்குவதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட அதிகாரப் பூர்வ முகமைகளுடனான கண்காணிப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து பலப்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள், வணிக வளாகச் சோதனைகள், சட்டவிரோதப் பொருட்களைப் பறிமுதல் செய்தல் மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்ட அபராதங்களை (Compound) விதித்தல் போன்ற அமலாக்கப் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் விளக்கினார்.








