விமான நிலையங்கள் மூடியுள்ளதாகப் பரவிய வதந்திகளைக் கம்போடியா அரசு மறுத்தது

27 மே 2026, 4:43 AM
விமான நிலையங்கள் மூடியுள்ளதாகப் பரவிய வதந்திகளைக் கம்போடியா அரசு மறுத்தது

புனோம் பென், மே 26: கம்போடியா தனது சர்வதேச விமான நிலையங்களைத் தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், நில எல்லைச் சோதனைச் சாவடிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை அந்நாட்டு அரசாங்கம் முற்றிலும் மறுத்துள்ளது.

நேற்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளில், கம்போடியாவின் சர்வதேச விமான நிலையங்கள் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் வருவதற்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மே 26 முதல் நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டதாக சின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தப் பதிவில், 40 வயதிற்குட்பட்ட அனைத்து வெளிநாட்டு மக்களும் (ஆண், பெண் இருபாலரும்), தகுந்த விசாக்கள் அல்லது வணிக ஆவணங்களை வைத்திருந்தாலும் கூட, கம்போடியாவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் போலியாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

இத்தகையப் பொய்ப் பரப்புரைகள் உண்மையைச் சிதைக்கவும், சர்வதேச பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும், சர்வதேச உறவுகளில் எந்தவொரு நாட்டினருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டாத கம்போடியாவின் நற்பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டு பரப்பப்பட்ட தவறான மற்றும் ஏமாற்றுத் தகவல்களாகும்," என்று கடுமையாகக் சாடியுள்ளது.

"சட்டப்பூர்வமான ஆவணங்களை வைத்துள்ள 40 வயதிற்குட்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கம்போடியாவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் அல்லது தடை செய்யும் எந்தவொரு கொள்கையையும் கம்போடியக் குடிவரவுத் துறை காவல்துறையினர் கொண்டிருக்கவில்லை என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்த விரும்புகிறது," என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கம்போடியாவின் சட்டப்பூர்வ நுழைவுத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் அனைத்து வெளிநாட்டுப் பிரஜைகளும், குறிப்பாகப் சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் இதர வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எப்போதும் கம்போடியாவிற்குள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள் என்று அரசு கூறியுள்ளது.

மேலும், வான்வழி மற்றும் நிலவழி நுழைவுப் புள்ளிகள் உட்பட கம்போடியா முழுவதிலும் உள்ள அனைத்து முக்கியச் சர்வதேச எல்லைச் சோதனைச் சாவடிகளும் வழக்கம் போல் சாதாரணமாக இயங்கி வருவதோடு, நிலையான நடைமுறைகளின்படி பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து கையாண்டு வருகின்றன என்றும் அது விவரித்துள்ளது.

"வெளிநாட்டினர் கம்போடியாவிற்குள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ பாதிக்கும் வகையில் எந்தவொரு மாற்றமும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை," என்று உள்துறை அமைச்சு திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.