ஓப்ஸ் எச்.ஆர்.ஏ.ஏ 2026: பேராக் மாநிலத்தில் இரண்டு நாட்களில் 1,662 வாகனங்கள் சோதனை

26 மே 2026, 2:37 AM
ஓப்ஸ் எச்.ஆர்.ஏ.ஏ 2026: பேராக் மாநிலத்தில் இரண்டு நாட்களில் 1,662 வாகனங்கள் சோதனை

ஈப்போ, மே 26: ஹஜ் பெருநாளை முன்னிட்டு பேராக் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நடத்திய சிறப்பு நடவடிக்கையான ‘ஓப்ஸ் HRAA 2026’-இன் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் 1,662 வாகனங்கள் சோதனையிடப் பட்டன.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்களில், பல்வேறு போக்குவரத்து விதி மீறல்களுக்காக 206 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதாக பேராக் JPJ இயக்குநர் முகமது யூசோஃப் அபுஸ்தான் தெரிவித்தார்.

மொத்தம் 510 ‘P22’ நோட்டீஸ்கள் வழங்கப் பட்டதாகவும், 53 ஓட்டுநர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ள வில்லை என்பது உறுதி செய்யப் பட்டதாகவும் அவர் கூறினார்.

"இந்த இரண்டு நாள் நடவடிக்கையில் கண்டறியப்பட்ட முதல் மூன்று குற்றங்கள், மோட்டார் வாகன உரிமம் (LKM) அல்லது சாலை வரி இல்லாதது (139 வழக்குகள்), காப்புறுதி இல்லாதது (119 வழக்குகள்) மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது (103 வழக்குகள்) ஆகும்," என்றார் அவர்.

"மேலும், அதிகாரிகள் மேற்கொண்ட மாறுவேட சோதனையின் போது, தொடர்ந்து வலது பாதையில் வாகனத்தை ஓட்டிய இரண்டு விரைவுப் பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று இன்று இங்குள்ள அமான் ஜெயா பேருந்து முனையத்தில் ‘ஓப்ஸ் HRAA 2026’ நடவடிக்கையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் முகமது யூசோஃப் தெரிவித்தார்.

மே 24 முதல் 31 வரை நடைபெறும் இந்த சிறப்பு நடவடிக்கை, அதிவேகமாக ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறுதல், இரட்டைக் கோட்டைத் தாண்டிச் செல்லுதல், மற்றும் வாகனம் ஓட்டும்போது கைப்பேசி யைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமையும் ஒன்பது முக்கிய குற்றங்களில் கவனம் செலுத்துகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"பொதுப் போக்குவரத்து தயார்நிலையின் ஒரு பகுதியாக, பேராக் JPJ, மே 24 முதல் 26 வரை பேருந்து பணிமனைகளில் சோதனைகளை மேற்கொண்டு, பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரம் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது," என்றார்.

மற்றொரு நிலவரத்தில், இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், ‘ஓப்ஸ் காஸ் கெண்டேரான் பெர்டாகங்கான் 2026’ (வர்த்தக வாகனங்களுக்கு சிறப்பு நடவடிக்கை) மூலம் 23,287 வர்த்தக வாகனங்கள் சோதனையிடப் பட்டதாக முகமது யூசோஃப் கூறினார்.

"அவற்றில், 2,923 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, இதில் 44 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 6,600 ‘P22’ நோட்டீஸ்கள், 499 ‘பிரிவு 63(3)’ நோட்டீஸ்கள் மற்றும் 41 ‘பிரிவு 64(1)’ நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன."

"வர்த்தக வாகனங்கள் செய்த குற்றங்களில், தொழிற்கல்வி உரிமம் (vocational license) இல்லாதது (999 வழக்குகள்), வர்த்தக வாகன உரிமம் (CDL) இல்லாதது (772 வழக்குகள்) மற்றும் அதிக சுமை ஏற்றியது (677 வழக்குகள்) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன," என்று அவர் கூறினார்.

இதே காலகட்டத்தில், ‘ஓப்ஸ் கெண்டேரான் மேவா’ (சொகுசு வாகன நடவடிக்கை) தீவிரப்படுத்தப் பட்டதாகவும், இதில் தொயோத்தா வெல்ஃபயர், தொயோத்தா  அல்பார்ட், மற்றும் போர்ஷே கெய்ன் உள்ளிட்ட 60 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முகமது யூசோஃப் தெரிவித்தார்.

"காலாவதியான சாலை வரி மற்றும் காப்புறுதி, செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்றவை முக்கிய குற்றங்களாகும். இது தொடர்பில், பேராக் JPJ 199 ‘P22’ நோட்டீஸ்களையும், 60 ‘பிரிவு 64(1)’ நோட்டீஸ்களையும் வழங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.