ஷா ஆலம், மே 21: தங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு சாதகமாக இருக்கும் போது மட்டுமே மாமன்னர், மதம் மற்றும் இனத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, வசதிக்கேற்ப விசுவாசத்தைக் காட்டும் பழக்கத்தை எதிர்க்கட்சியினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் சொந்த நலன்களுக்குச் சாதகமாக இல்லாதபோது, சிலர் அதேக் கொள்கைகளைப் புறக்கணிப்பதையே இத்தகைய மனப்பான்மை காட்டுகிறது என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி திட்டவட்டமாக கூறினார்.
"சிலாங்கூர் அரச நிறுவனத்தின் மாண்பை வெளித் தரப்பினர் அவமதிக்கும் போதும் குறை கூறும் போதும், அரசியலுக்காக மட்டுமே இவர்கள் மௌனம் காக்கின்றனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தியாகத் திருநாளை (ஐடிலாட்ஹா) முன்னிட்டு சிலாங்கூர் சுல்தான் மேதகு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் ஆற்றிய உரையை வரவேற்றுப் பேசிய அவர், மாநில மற்றும் நாட்டின் அமைதி, நல்வாழ்வு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகும் என்று விளக்கினார்.
சில தரப்பினர் குறுகிய அரசியலுக்காக இனவாதத்தைத் தூண்டவும், மத உணர்வுகளையும் அரச நிறுவனத்தையும் பகடைக்காயாகப் பயன்படுத்தவும் முற்படும் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் மாமன்னரின் இந்த உரை வெளிவந்துள்ளது என்று அவர் கூறினார்.
"மலேசியா இன வெறுப்பு அல்லது மத அச்சத்தின் அடிப்படையில் கட்டமைக்கப் படவில்லை; மாறாக, முப்பரிமாணக் கருத்து, பல்வேறு பின்னணி களுக்கு இடையிலான புரிதல் மற்றும் மலேசியக் கட்டமைப்பின் அடிப்படையை ஏற்றுக்கொள்ளும் சட்டத்தின் மாண்பு ஆகிய உணர்வுகளின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது," என்று அமிருடின் கூறினார்.
முன்னதாக, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பாதுகாக்க, பல்லின மக்களும் எப்போதும் ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கேட்டுக்கொண்டார்.
அரசியல்வாதிகளிடையே நிலவும் அதீத மோதல்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் தற்போதைய நிலவரம் குறித்தும் சுல்தான் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே, சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து ஒற்றுமை, மிதவாதம், அரசியலமைப்பு ரீதியான மாமன்னர் மீதான மரியாதை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் என்று அமிருடின் வலியுறுத்தினார்.
ஒரு பன்மைத்துவ நாட்டில் மிகப்பெரிய தியாகம் என்பது வெறுப்பை நிராகரிப்பதற்கான தைரியமே என்பதை இந்த ஆண்டின் தியாகத் திருநாள் அனைவருக்கும் நினைவூட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"மக்களின் ஒற்றுமை என்பது எளிதாகக் கருதிவிடக் கூடிய ஒன்றல்ல; மாறாக, நமது பொதுவான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் அதனைக் கடைப்பிடித்துப் பாதுகாக்கப் போராட வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
வசதிக்கேற்ப அரசியல் லாபத்திற்கு விசுவாசத்தைக் காட்டுவதை நிறுத்துங்கள்: மந்திரி புசார் திட்டவட்டம்
21 மே 2026, 7:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஒப்புக்கல்ல, ருக்குன் நெகாராவை ஆழமாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்: மந்திரி புசார் வலியுறுத்தல்
Pakiya
21 மே 2026

video
Projek mitigasi banjir mula tunjuk hasil, lokasi berisiko tinggi kini terkawal
Kathiravan Manoharan
27 ஏப்ரல் 2026

video
MB seru rakyat amal kesederhanaan, kukuh perpaduan menjelang Aidilfitri
Kathiravan Manoharan
19 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநில மசூதியில் தினமும் 1,300 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் இலவசமாக விநியோகம்
Evelyn Moses
20 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




