ஒப்புக்கல்ல,  ருக்குன் நெகாராவை ஆழமாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்: மந்திரி புசார் வலியுறுத்தல்

21 மே 2026, 8:02 AM
ஒப்புக்கல்ல,  ருக்குன் நெகாராவை ஆழமாக உணர்ந்து பின்பற்ற வேண்டும்: மந்திரி புசார் வலியுறுத்தல்

ஷா ஆலம், மே 21: சிலாங்கூர் சுல்தான் மாட்சிமை மிக்க சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆணைக்கிணங்க, ருக்குன் நெகாரா (Rukun Negara) தத்துவத்தின் பின்னணி மற்றும் முகவுரையை வாசித்துப் புரிந்துகொள்வது உட்பட, அதனை முழுமையாக உள்வாங்கிச் செயல்பட வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

ஒன்றுபட்ட, ஜனநாயக, நீதியான மற்றும் முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நாட்டின் நிறுவனர்களின் மாபெரும் இலட்சியங்கள் அதில்தான் அடங்கியுள்ளன என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"ருக்குன் நெகாரா என்பது அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் வெறுமனே உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அல்ல, மாறாக அது குடிமக்களின் வாழ்வில் இரண்டறக் கலக்க வேண்டிய தேசிய தத்துவமாகும்," என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிக உயர்ந்த சட்டமான கூட்டரசு அரசியலமைப்பை, சட்டப்பிரிவு 4-இன் கீழ் நேர்மையாகவும் பொறுப்புணர்வுடனும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் வலியுறுத்தினார்.

குறுகிய அரசியல் லாபங்களுக்காக நாட்டின் வரலாறு திரிக்கப் படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மறைந்த துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ் அவர்களின் சுதந்திரப் பிரகடனத்தின் உண்மையான அர்த்தத்தையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அமிருடின் மேலும் தெரிவித்தார்.

"மலேசியா நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியாளர் முறைமையின் அடிப்படையில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது."

"எனவே, அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் வரலாற்றைத் திரிப்பது, இனங்களுக்கிடையே வெறுப்பை விதைப்பது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவது போன்ற எந்த ஒரு முயற்சியும் பொறுப்பற்ற செயலாகும்; மேலும், இது நாட்டின் எதிர் காலத்திற்கு மிகவும் ஆபத்தானது," என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னதாக, மே 19-ஆம் தேதி, டத்தாரான் சிலாங்கூரில் உள்ள நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள ருக்குன் நெகாரா கொள்கைகளை, மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் முழுமையாக உள்வாங்கிக் கடைப்பிடிக்க வேண்டும் என சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியிருந்தார்.

இதற்கிடையே, இன்று காலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, பல்லின மக்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என சுல்தான் கேட்டுக்கொண்டார்.

அரசியல்வாதிகளிடையே நிலவும் அதிகப்படியான மோதல்கள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழ்நிலை குறித்தும் சிலாங்கூர் ஆட்சியாளர் தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.