மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும், பல்லின ஒற்றுமையை நிலைநாட்டவும் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

21 மே 2026, 5:41 AM
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும், பல்லின ஒற்றுமையை நிலைநாட்டவும் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

ஷா ஆலம்: நாட்டின் நல்லிணக்கமும் ஸ்திரத்தன்மையும் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்யும் பொருட்டு, நாட்டில் உள்ள பல்வேறு இன மக்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.

தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள், முஸ்லிம்களுக்குத் தியாகம், நேர்மை மற்றும் உம்மா (சமூக) ஒற்றுமையின் அர்த்தத்தைக் கற்பிக்கிறது என்றும், அதனைச் சமுதாய வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தெரிவித்தார்.

"பதவி, இனம், அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் புனித பூமியில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடும் போது, அவர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் மிகப்பெரிய ஒற்றுமைக்கான ஒரு சிறந்த உதாரணத்தை முன்வைக்கிறார்கள்," என்று 2026-ஆம் ஆண்டு ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சுல்தான் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், இனத்தின் பலவீனத்திற்கு வழிவகுக்கும் பிளவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் சுல்தான் ஷராபுடின் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

"அரசியல் தலைவர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை, இந்நாட்டிலுள்ள மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல் படுவார்கள் என நான் நம்புகிறேன்."

"நாம் தொடர்ந்து பிளவுபட்டு, நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தால், நாமே நஷ்டமடைந்து பலவீனமடைவோம்," என்று சுல்தான் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல்வாதிகளிடையே அதிக அளவிலான மோதல்கள் நிலவுவது குறித்தும், இதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்தும் சுல்தான் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகள், வெளிநாட்டினர் அதைப் பயன்படுத்தி நமது சொந்த மண்ணிலேயே நமது இனத்தின் நிலையை பலவீனப்படுத்த வழிவகுத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், மலாய்க்காரர்களின் ஒற்றுமை என்பது மற்ற இனங்களுக்கு எதிரான விரோதப் போக்கு என தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது; மாறாக, இது ஒரு அமைதியான மற்றும் நிலையான நாட்டிற்கான அடித்தளமாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தினார்.

"மாறாக, ஒற்றுமையாக வாழும் ஒரு சமூகத்தின் பலம் நாட்டை மேலும் அமைதியாகவும், நிலையானதாகவும் மாற்றும்; மேலும், மக்கள் ஒருவரையொருவர் மதித்து வாழ வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.

சமுதாயத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த, நாட்டில் உள்ள அனைத்து இனங்களும், மதங்களும் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் சுல்தான் கேட்டுக்கொண்டார்.

உஸ்மானியப் பேரரசு (Ottoman Empire) காலத்தில் இஸ்லாமிய நாகரிகத்தின் புகழ்பெற்ற வரலாற்றையும் சுல்தான் ஷராபுடின் உதாரணமாகக் காட்டினார்; அந்த காலகட்டத்தில் பல இன மக்கள் மிகவும் இணக்கமாக வாழ்ந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

அதே வாழ்த்துச் செய்தியில், சுல்தானும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரியும், மலேசிய ஹஜ் யாத்ரீகர்கள் தங்களது வழிபாடுகளை எளிதாக நிறைவேற்றவும், நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ் கடமையுடன் (Haji Mabrur) நாடு திரும்பவும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்தனர்.

"அனைவருக்கும் தியாகத் திருநாள் (ஹஜ் பெருநாள்) நல்வாழ்த்துகள்" என்று சுல்தான் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.