ஷா ஆலம், மே 4: அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய செயல்கள் மேலும் பரவாமல் தடுக்க இது அவசியம் என்றார்.
சமீப காலமாக பொறுப்பற்ற தரப்பினர் அரச குடும்பத்தை அவமதிக்கும் செயல்களில் துணிச்சலாக ஈடுபட்டு வருவது கவலை அளிப்பதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“சில சமயங்களில் மனிதர்கள் எல்லை மீறிச் செல்கின்றனர். எனவே, 3R (இனம், மதம், அரசமைப்பு) தொடர்பான விவகாரங்களில் ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கும் வகையில், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
“இது பேச்சு சுதந்திரத்தை முடக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் முன்பு விமர்சித்திருந்தன. ஆனால், அதன் விளைவுகளை இப்போது பார்க்கும்போது, இது ஒரு அசாதாரணமான சூழல் என்பதையும், இதைக் கையாண்டே ஆக வேண்டும் என்பதையும் நான் காண்கிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று டேவான் ஜூப்ளி பெராக்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பப்பாராய்டு அவர்களும் கலந்து கொண்டார்.
அரசமைப்பு என்பது மதிக்கப்பட வேண்டிய மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களின் ஒற்றுமையின் சின்னம் என்றும், அது பொதுமக்களின் ஏளனப் பொருளாக மாறக்கூடாது என்றும் அமிருடின் மேலும் கூறினார்.
அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கத்தைப் பரப்பிய நபர்களை உடனடியாகக் கைது செய்த காவல்துறைக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
“காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்ததற்கு நன்றி. இதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றார்.
நேற்று, மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையிலான புகைப்படத்தைப் பதிவேற்றியது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காகப், பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) மற்றும் பினாங்கு காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர்கள், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்துடன் (SKMM) இணைந்து நேற்று இரவு 7.10 மணியளவில் அந்த ஆடவரைக் கைது செய்தனர்.
முன்னதாக, ஏப்ரல் 25 அன்று முகநூல் கணக்கு மூலம் பதிவேற்றப்பட்ட சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜை அவமதிக்கும் வகையிலான கேலிச்சித்திரம் தொடர்பாக நாடு முழுவதும் 280 புகார்களைப் பெற்றதாக சிலாங்கூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.
அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டத்தோ மந்திரி புசார்
4 மே 2026, 8:03 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கல்வித் துறைக்கு 13.6 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு - மந்திரி புசார்
Shalini Rajamogun
8 மே 2026

selangor
மின்சார வாகனத் துறையில் 2 பில்லியன் ரிங்கிட் முதலீடு: சிலாங்கூரைப் பசுமைத் தொழில் நுட்ப மையமாக மாற்றத் திட்டம்
Shalini Rajamogun
5 மே 2026

national
நாட்டின் பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
22 ஜூன் 2026

video
Selangor umum 15 lagi inisiatif, RM355.06 juta perkukuh daya tahan ekonomi
Kathiravan Manoharan
19 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



