'ஃப்ளீட் கார்டு' பயன்படுத்தி மானிய டீசல் முறைகேடு - இருவர் கைது

20 மே 2026, 8:43 AM
'ஃப்ளீட் கார்டு' பயன்படுத்தி மானிய டீசல் முறைகேடு - இருவர் கைது

ஷா ஆலம், மே 20: ஜாலான் பத்து தீகா லாமாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், 'ஃப்ளீட் கார்டு' பயன்படுத்தி மானிய டீசலை முறைகேடாகப் பெற்றதாக நம்பப்படும் இருவரை சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) நேற்று கைது செய்தது.

சிலாங்கூர் KPDN தலைமை அமலாக்க அதிகாரி, முகமட் ஹனிஸாம் கெச்சிக் கூறுகையில், நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு பாண்டட் லாரி காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

சோதனையின் போது, அந்த லாரி டீசல் நிரப்பிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேல்
நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

"அந்த லாரியை 45 வயதுடைய இரு உள்ளூர்வாசிகள் இயக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஓட்டுநர் மற்றும் உதவியாளராக இருக்கலாம் என நம்பப்படுகிறது," என அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

பணியில் இருந்த அதிகாரிகள், டீசல் நிரப்பும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, லாரியைச் சோதனை செய்தனர்.

"சோதனையின் போது, லாரியின் உள்ளே தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு இடைநிலை கொள்கலன் தொட்டிகள் (IBC) இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் சில தொட்டிகளில் டீசல் என சந்தேகிக்கப்படும் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது," என்றார்.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 2,000 லிட்டர் டீசல் முறைகேடு செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டதாக முகமது ஹனிஸாம் மதிப்பிட்டார்.

மேலும், மானிய விலையில் டீசல் வாங்குவதற்காகப் பல 'ஃப்ளீட் கார்டுகள்' பயன்படுத்தப்பட்டதும் சோதனையில் தெரியவந்தது.

"அவற்றில் ஒன்று, தடுத்து வைக்கப்பட்ட லாரியின் பதிவு எண்ணிலிருந்து வேறுபட்ட அடையாள எண்ணைக் கொண்டிருந்தது. இந்த கண்டுபிடிப்பு, 'ஃப்ளீட் கார்டு' வசதி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை வழங்கியுள்ளது," என்றார்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களாலும், கட்டுப்படுத்தப்பட்ட பொருளான டீசலை வைத்திருப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் உரிய ஆவணங்களைக் காட்டத் தவறிவிட்டனர்.

லாரி மற்றும் எரிபொருள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM120,000-ஐ எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
"லாரியும் எரிபொருளும் பறிமுதல் செய்யப்பட்டு, சிலாங்கூர் KPDN-இன் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன," என்றார்.

இவ்வழக்கு, விதி 3(1) உடன் இணைந்த 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 21-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.