கிள்ளான் புலாவ் கெத்தாமில் - ஓப்ஸ் டிரிஸ் 4.0 (ஒருங்கிணைந்த) நடவடிக்கையின் கீழ் 43 மையங்கள் மீது சோதனை 

20 மே 2026, 8:17 AM
கிள்ளான் புலாவ் கெத்தாமில் - ஓப்ஸ் டிரிஸ் 4.0 (ஒருங்கிணைந்த) நடவடிக்கையின் கீழ் 43 மையங்கள் மீது சோதனை 

கிள்ளான், மே 20: புலாவ் கெத்தாமில் நேற்று நடைபெற்ற ஓப்ஸ் டிரிஸ் 4.0 (ஒருங்கிணைந்த) நடவடிக்கையின் கீழ், மீன் கெலோங் மற்றும் டீசல் சேகரிப்பு மற்றும் விநியோக மையங்கள் உட்பட 43 வணிக வளாகங்கள் சோதனையிடப்பட்டன.

காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையை, சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
(KPDN), புத்ராஜெயா KPDN அமலாக்கப் பிரிவு மற்றும் சிலாங்கூர் கடல் போலீஸ் படையுடன் இணைந்து மேற்கொண்டது.

KPDN அமலாக்கப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநர்
(தடுப்பு) அரிஸ் மாமாட் கூறுகையில், இந்த நடவடிக்கை எரிபொருள் முறை கேடுகளைத் தடுப்பதிலும், 1972-ஆம் ஆண்டு எடை மற்றும் அளவீடுகள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்தார்.

இங்குள்ள பல தொட்டிகள், மீனவர் படகுகள் மற்றும் டீசல் சேகரிப்பு மையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டதாக அவர் கூறினார்.

"சோதனையின் போது, நாங்கள் குறிப்பிட்ட சில தொட்டிகள், மீனவர் படகுகள் மற்றும் டீசல் சேகரிப்பு மையங்களில் கவனம் செலுத்தினோம். மேலும், மீனவர்களுக்கான விநியோக முறைகள் மற்றும் கடலுக்குச் சென்று திரும்பிய பிறகு மீன்பிடி விளைச்சலைக் கண்காணிக்கும் செயல்முறை குறித்தும் அப்பகுதி மீனவர் சங்கம்
(PNK) எங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், 1972-ஆம் ஆண்டு எடை மற்றும் அளவீடுகள் சட்டத்தின்படி, வணிகர்கள் தங்கள் எடைக் கருவிகளை மறுசரிபார்ப்புச் செய்வதற்கு வசதியாக புலாவ் கெத்தாமில் KPDN ஒரு சிறிய சாவடியைத் திறந்ததாகவும் அரிஸ் குறிப்பிட்டார்.

புலாவ் கெத்தாம் வணிகர்கள் தங்கள் எடைக் கருவிகளைச் சீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பதாகவும், பலரும் தங்கள் அளவீட்டுக் கருவிகளை மறுசரிபார்ப்புக்காகக் கொண்டு வந்ததாகவும் அவர் பாராட்டினார்.

"எங்கள் கண்காணிப்பில், இப்பகுதி வணிகர்கள் எடைக்கருவிகளைச் சீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி உயர் மட்ட விழிப்புணர்வைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இது நுகர்வோர் ஏமாற்றப்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் புலாவ் கெத்தாமில் போதுமானதாகவும், நிலையானதாகவும், எந்தவிதத் தடையின்றியும் உள்ளது," என்றார்.

இறைச்சி வியாபாரியான யாப் குய் செங், 64, கூறுகையில், புலாவ் கெத்தாமிற்கு KPDN வருகை தந்து, சாவடி அமைத்தது எடைக்கருவிகளை முக்கிய வர்த்தக உபகரணங்களாகப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது என்றார்.

"நாங்கள் எடைக்கருவியை சரிபார்க்க அனுப்பவில்லை என்றால், எடை குறைவாக இருந்தால் நமக்கு நட்டம் ஏற்படும், அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் கோபப்படுவார்கள். நான் ஒவ்வொரு வருடமும் மறுசரிபார்ப்பு செய்வேன். இதற்குக் கட்டணம் உண்டு, ஆனால் அது அதிகமாக இல்லை. நட்டம் ஏற்படுவதற்கு முன்பு இதைச் செய்வது நல்லது," என்றார் அவர்.

1972-ஆம் ஆண்டு எடை மற்றும் அளவீடுகள் சட்டத்தின் கீழ், வணிகர்கள் ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் தங்கள் எடைக்கருவிகளை மறுசரிபார்ப்புச் செய்ய வேண்டும். தவறினால்,
RM40,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.