கோலாலம்பூர், மே 12: மலேசியத் தொழிலாளர் சேமநிதி வாரியம் (KWSP/EPF), தனது உறுப்பினர்களின் ஓய்வூதிய கால வருமானத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் i-Legasi மற்றும் ஓய்வூதிய இலக்குக் கணக்கீட்டுக் கருவி (Retirement Goal Calculator) ஆகிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈபிஎஃப் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அகமது சுல்கர்னைன் ஒன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ஓய்வூதியத் திட்டமிடல் என்பது வெறும் சேமிப்போடு மட்டும் நின்றுவிடாமல், அந்தச் சேமிப்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக்கூடியதாகவும், போதுமானதாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை வாழ்நாள் முழுவதும் முறையாக நிர்வகிப்பதோடு, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு நிதிப் பாரம்பரியத்தை விட்டுச் செல்வதற்கு ஏதுவாக இந்த ஆதரவு விரிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள i-Legasi வசதியின் மூலம், உறுப்பினர்கள் முழுமையாகப் பணத்தை மீட்கும் வயதை எட்டிய பிறகு, தங்கள் ஈபிஎஃப் சேமிப்பின் ஒரு பகுதியைத் தங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களின் ஈபிஎஃப் கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். இது தலைமுறை கடந்த நிதிப் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
அதேவேளையில், 55 அல்லது 60 வயதை எட்டும்போது தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்திரப் பணம் எடுக்கும் முறை, இப்போது i-Emas என மறுபெயரிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியச் சேமிப்பை ஒரே நேரத்தில் முழுமையாகத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, i-Emas மூலம் தானியங்கி முறையில் மாதாந்திர வருமானமாகப் பெறுவதைத் தேர்வு செய்யலாம். இதன் மூலம், கணக்கில் எஞ்சியிருக்கும் தொகைக்குத் தொடர்ந்து ஆண்டுதோறும் லாப ஈவு (Dividend) பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 21,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இத்தகைய மாதாந்திரப் பணம் எடுக்கும் முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அகமது சுல்கர்னைன், இது ஓய்வூதியத்திற்குப் பிறகு முறையான மாதாந்திர வருமானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
i-Emas திட்டம் உறுப்பினர்களின் அன்றாடத் தேவைகளை நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மொத்தப் பணத்தையும் திடீரென இழப்பது அல்லது நிதி மோசடிகளில் சிக்கி ஏமாறுவது போன்ற ஆபத்துகளில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
மேலும், உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலத் தேவைகளைத் துல்லியமாகத் திட்டமிட i-Akaun செயலியில் புதிய டிஜிட்டல் கணக்கீட்டுக் கருவி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறை மற்றும் எதிர்காலச் செலவினங்களைக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான சேமிப்பு இலக்கை இப்போதே நிர்ணயித்துச் செயல்பட முடியும்.
இப்புதிய முன்னெடுப்புகள் மலேசியர்களின் முதிர் கால வாழ்வை நிதி ரீதியாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








