கோலாலம்பூர், அக் 9 - குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை எட்டும்போது, ஊழியர் சேமநிதி வாரிய (KWSP) உறுப்பினரகளின் கணக்குகளில் புதிய கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் பரிந்துரையை அரசாங்கம் இன்னும் பரிசீலித்து வருகிறது.
அப்புதிய கட்டமைப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
அவற்றிள் ஒன்று உறுப்பினரின் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நேரத்திலும் பணத்தை மீட்பதற்கான தளர்வான சேமிப்பு ஆகும். மற்றொன்று, வருமான சேமிப்பு, அதாவது உறுப்பினர் சேமிப்புத் தொகை தீர்ந்து போகும் வரையில் அவ்வப்போது அல்லது மாதந்தோறும் விநியோகிக்கப்படும் என்றார்.
"இந்த புதிய அமைப்பு, நடைமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நாளுக்கு பிறகு பதிவு செய்யும் புதிய உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனினும், எதிர்காலத்தில் இந்த அமைப்பு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய உறுப்பினர்களும் இதில் சேர விருப்பினால் அதற்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்," என்றார் அவர்.
இன்று, மக்களவையில், ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்புத் தொகையை மீட்பதற்கான நடைமுறையை அரசாங்கம் மறுபரிசீலனைச் செய்வது குறித்து, தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சீ எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா