ஷா ஆலாம், மே 11: தெலோக் பாங்லிமா காராங் தொழில்பேட்டை பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறிச் செயல்பட்ட தொழிற்சாலைகளுக்கு எதிராகக் கோலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) அதிரடி அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தம் 26 குற்றச்சாட்டுக் குறிப்புகளும் 20 அறிவிப்பு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்தச் சோதனையில், உரிமம் இன்றி வணிகம் செய்தல், திறந்தவெளி எரிப்பு, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமை, அனுமதியின்றி நில வேலைகள் செய்தல் மற்றும் அனுமதியின்றி கட்டடங்களை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு சட்டமீறல்கள் கண்டறியப்பட்டதாக நகராட்சி மன்றம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நோட்டீஸ்கள் 1976-ஆம் ஆண்டு உள்ளாட்சி அரசாங்கச் சட்டம், 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டடச் சட்டம் மற்றும் நகராட்சி மன்றத்தின் துணைச் சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
"சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் உடனடியாகப் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் சட்டத்தை மீறுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என நகராட்சி மன்றம் எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் MPKL மண்டலம் 3-இன் நகர்மன்ற உறுப்பினர், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை, உரிமத் துறை, கட்டடக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








