புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிலாங்கூர் உறுதி

1 மே 2026, 2:39 AM
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சிலாங்கூர் உறுதி

ஷா ஆலம், மே 1: தொழிலாளர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சிலாங்கூர் மாநில நிர்வாகம் தொழிலாளர் துறைக்கு தனது முழுமையான அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வழங்கும்.

மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர் வி.பப்பாராய்டு கூறுகையில், டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசாங்கம், தொழிலாளர்களின் உரிமைகளான நியாயம், ஊதியப் பட்டுவாடா மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல் போன்றவற்றைப் பாதுகாக்கும் என்றார்.

"இன்று நாம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். சிலாங்கூரின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அனைத்து தொழில்களும் ஒரு பலமாகும். முதலாளிகள் தங்கள் ஊழியர்களைப் பங்காளிகளாக நடத்த வேண்டும்.

"நமது நாட்டின் வளர்ச்சியில் ஒத்துழைத்து பங்களித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி. நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்கள் சேவையையும் ஆற்றலையும் அர்ப்பணித்த அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்," என்று இன்று கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காணொளிப் பதிவு மூலம் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், நாட்டின் தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இன்று முதல் மே 3ஆம் தேதி வரை புக்கிட் ஜாலில், யூனிஃபை அரங்கில் நடைபெறும் 'தொழிலாளர் தினக் கொண்டாட்டம் 2026' மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, வேலை வாய்ப்புகள், திறன் மேம்பாடு மற்றும் மக்களுக்கு பல்வேறு சேவைகள் மூலம் தொழில் சூழலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சு (கேசுமா) வெளியிட்ட அறிக்கையில், "Pekerja MADANI Kesuma Bangsa" என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்றும், இதில் தொழிற்சங்கங்கள், அரசு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமரின் சிறப்புரை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமையும். மேலும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்த தொழிலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் '2026 தொழிலாளர் தின விருதுகள்' வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

தொழிலாளர் தலைவர், சிறந்த முதலாளி, தொழிற்சங்கம், ஊடகம் மற்றும் சிறந்த அணி வகுப்புக் குழு உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வெற்றியாளரும் ரிம 10,000 ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பட்டயத்தைப் பெறுவார்கள். மொத்தப் பரிசுத் தொகை ரிம 140,000 ஆகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.