ஷா ஆலம், ஏப்ரல் 29: 2021 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் 134 வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரிம 5.74 பில்லியனை சிலாங்கூர் ஒதுக்கியுள்ளது. இத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.
அத்தொகையில், 108 திட்டங்களுக்காக மாநில அரசு ரிம 2.11 பில்லியனை வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள ரிம 3.63 பில்லியன், 26 திட்டங்களுக்காக மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“மொத்த திட்டங்களில், 47 திட்டங்கள் ஏறக்குறைய ரிம 791 மில்லியன் செலவில் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 44 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. 24 திட்டங்கள் விரிவான வடிவமைப்பு கட்டத்திலும், 38 திட்டமிடலிலும், 16 இன்னும் தொடங்கப்படாமலும் உள்ளன.
"இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 19 திட்டங்கள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.
மாநில அரசு மூன்று கட்ட உத்திகளைச் செயல்படுத்துகிறது: உடனடித் தீர்விற்கான திட்டங்கள் (quick-win), ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும் நடுத்தர காலத் திட்டங்கள் மற்றும் ஐந்தாண்டுகள் வரை ஆகக்கூடிய நீண்ட கால ஆற்றுப் படுகைத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும் என்றார் இஷாம்.
அவரது கூற்றுப்படி, ரிம 57 மில்லியன் செலவில் 149 உடனடித் தீர்வுத் திட்டங்கள் முடிக்கப்பட்டு, அபாயகரமான பகுதிகளில் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவியுள்ளன.
வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. ஏனெனில் நீர்நிலையியல் மற்றும் நீரியல் போன்ற தொழில்நுட்ப ஆய்வுகள், நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன என்று அவர் விளக்கினார்.
சவால்கள் இருந்தபோதிலும், சிலாங்கூரில் 2022-இல் 97 ஆக இருந்த வெள்ள அபாய மையங்களின் (hotspot) எண்ணிக்கை 2025-இல் 56 ஆகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், வெள்ள அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை 390-லிருந்து 232 ஆகக் குறைந்துள்ளது.
"நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), பொதுப்பணித் துறை (JKR), உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு மூலமும், புதிய மேம்பாட்டுத் திட்டங்களில் தளத்திலேயே நீர்த்தேக்க அமைப்பை (OSD) அமல்படுத்துவதன் மூலமும் மாநில அரசு செயலாக்கத்தை வலுப்படுத்தி வருகிறது," என்றார்.
மேலும், சிலாங்கூர் நீர் மேலாண்மைக்காக நெதர்லாந்தின் நிபுணத்துவம், நீர் சேமிப்பிற்காக ஜெர்மனியின் ஈக்கோ பிளாக் (EcoBlock) அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை நிலைப்படுத்த இந்தோனேசியாவின் எஸ்பிஎஸ் (SPS) தொழில்நுட்பம் போன்ற அனைத்துலகத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.
பருவநிலை மாற்றம் வெள்ள அபாயத்தை அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் குறுகிய காலத்தில் பெய்யும் கனமழை, மாறிவரும் மழையின் தன்மை மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
ரிம 870 மில்லியன் மதிப்புள்ள சுங்கை பூலாய் வெள்ளத் தணிப்புத் திட்டம் இரண்டாம் கட்டம் (RTB Sungai Pulai Fasa 2), ஆற்றை ஆழப்படுத்துதல், கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் பெரிய அளவிலான தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கிய முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும்.
கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக, வெள்ளத் தடுப்பு, உள்கட்டமைப்பு, நீர் மற்றும் பசுமைப் பொருளாதாரம் தொடர்பான திட்டங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க மாநில அரசு இலக்கவியல் டாஷ்போர்டு (digital dashboard) முறையை உருவாக்கி வருகிறது.
சிலாங்கூரின் வெள்ள மேலாண்மை அணுகுமுறை, நீண்ட காலத்திற்கு நீர் விநியோகப் பாதுகாப்பையும் பருவநிலை மாற்றத்திற்கான பின்னடைவையும் உறுதி செய்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை உத்தியின் ஒரு பகுதியாகும் என்று இஷாம் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக RM5.74 பில்லியன் ஒதுக்கீடு
29 ஏப்ரல் 2026, 1:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
27 ஜூலை 2026

selangor
நகர்ப்புற & கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் - பாப்பாராய்டு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

national
சிலாங்கூரில் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
27 ஜூலை 2026

selangor
RS-1இன் வறுமை ஒழிப்பு முன்னெடுப்புகள் RS-2 திட்டத்திலும் தொடரும் – பாப்பாராய்டு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



