புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான வாடகை உதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு

28 ஏப்ரல் 2026, 2:50 AM
புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான வாடகை உதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 28 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐந்தாம் கட்ட தற்காலிக வீட்டு வாடகை உதவிக்கான முன்மொழிவு, மாநில ஆட்சிக்குழுவின் (MMKN) பரிசீலனைக்குக் கொண்டு செல்லப்படும்.

பாதிக்கப்பட்டவர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகப், பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்ததாக
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறினார்.

இந்த சம்பவத்தால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

"பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகம், ஐந்தாம் கட்ட வாடகை உதவிக்கான முன்மொழிவை மாநில அரசின் பரிசீலனைக்காக ஏப்ரல் 21, 2026 அன்று சமர்ப்பித்துள்ளது," என்று அவர் சிலாங்கூர்
மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

மேலும், புத்ரா ஹைட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2026-க்கான நான்காம் கட்ட வாடகை உதவி, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிலாங்கூர்
வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தால் (LPHS) முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"மொத்தம் RM402,000 நிதி ஒதுக்கீட்டில், 67 குடும்பத் தலைவர்கள் (KIR) இந்த உதவியைப் பெற தகுதி பெற்றுள்ளனர். நான்காம் கட்ட அமலாக்கத்தில் எந்தவித நிலுவையும் இல்லை, தகுதியான பயனாளிகள் யாரும் விடுபடவில்லை," என்றார்.

இதற்கிடையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதிய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மலிவு விலை வீடுகளை வழங்குவதில் மாநில அரசு எப்போதும் உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

"உலு லங்காட் பகுதியில் மட்டும், 55,671 வீடுகளைக் கொண்ட 101 திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியில் 68 மலிவு விலை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன."

"மேலும், சொந்தமாக வீடு வாங்க முடியாதவர்களுக்கு உதவும் வகையில், 'ஸ்மார்ட் சேவா' திட்டம் போன்ற மாற்று வழிகளையும் மாநில அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், மக்கள் மலிவு விலையில் வாடகைக்கு இருந்து கொண்டே, எதிர்காலத்தில் வீடு வாங்குவதற்கான சேமிப்பை மேற்கொள்ளலாம்," என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.