சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் மீது குடிநுழைவுத்துறை சோதனை: 45 பேர் கைது

24 ஏப்ரல் 2026, 6:26 AM
சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் மீது குடிநுழைவுத்துறை சோதனை: 45 பேர் கைது

ஷா ஆலாம், ஏப்ரல் 24: சட்டவிரோத குடியேறிகளை (PATI) பணியமர்த்தும் பிடிவாதமான முதலாளிகளுக்கு எதிராக, சிலாங்கூரைச் சுற்றியுள்ள எட்டு இடங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை நேற்று ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் கூறுகையில், புத்ராஜெயா குடிநுழைவுத்துறை அமலாக்கப் பிரிவினரால் காலை 11 மணியளவில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. செமினி, ஜென்ஜாரோம், ஸ்ரீ கெம்பாங்கான், செராஸ் மற்றும் செர்டாங் ஆகிய இடங்களில் உள்ள வளாகங்களில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.

"பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் இரண்டு வார கால உளவுப் பணியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டது. பல்வேறு பதவிகளைச் சேர்ந்த 52 அதிகாரிகளைக் கொண்ட குழு ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது. இதில் 66 வெளி நாட்டினர் மற்றும் 22 உள் நாட்டினர் உட்பட மொத்தம் 88 பேர் சோதனையிடப் பட்டனர்," என அவர் தெரிவித்தார்.

"சோதனையின் விளைவாக, 29 முதல் 50 வயதுக்குட்பட்ட வங்காளதேசம், மியான்மர், இந்தியா, நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் விதி 39(b) கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப் படுகின்றனர்.

இதே நடவடிக்கையில், சட்டவிரோத குடியேறிகளைப் பணியமர்த்திய ஒன்பது உள்ளூர்வாசிகளுக்கு, விசாரணைக்கு உதவும் வகையில் சாட்சிக்கான சம்மன் (படிவம் 29) வழங்கப் பட்டதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படாத முதலாளிகளை ஒடுக்குவதற்கான அமலாக்க நடவடிக்கைகளை குடி நுழைவுத் துறை தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்று ஸக்காரியா தெரிவித்தார்.

"அமலாக்க நடவடிக்கை, சட்டத்தை மீறும் வெளிநாட்டினர் மீது மட்டும் கவனம் செலுத்தாது; மாறாக, சட்டவிரோத குடியேறிகளைப் பணியமர்த்தும் பிடிவாதமான, கவனக்குறைவான அல்லது வேண்டுமென்றே செயல்படும் முதலாளிகளையும் குறிவைக்கும். சட்டவிரோதமாக வெளி நாட்டினருக்குப் பாதுகாப்பு அளிக்கும் அல்லது வேலை கொடுக்கும் எந்தத் தரப்பினர் மீதும் சமரசமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டினரும் மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைக்காக செமினி குடி நுழைவுத் தடுப்புக் கிடங்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.