புத்ராஜெயா, ஆகஸ்ட் 19 — உள்துறை அமைச்சு (KDN) வெளிநாட்டவர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகவும், 12 லட்சம் சீனப் பிரஜைகள் மலேசியாவை விட்டு வெளியேறவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தாம் ஏற்கெனவே பலமுறை மறுத்துள்ளதாகக் குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் , அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எனினும், பொதுமக்களைக் குழப்புவதற்காக இந்த பொய்யான தகவல்கள் அடங்கிய காணொளிகள், சுவரொட்டிகள் ஆகியவை சில தரப்பினரால் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதுபோன்ற அவதூறான தகவல்களைப் பரப்புவது தனிநபர்கள் அல்லது அரச நிறுவனங்களின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாது.
மாறாக, இது இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டவும், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை பாதிக்கவும் வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ உணர்வுபூர்வமான விவகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதையும் அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டும் என்று சைஃபுடின் வலியுறுத்தினார்.







