உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு  விவசாயத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, பேராக்கிற்கு தனது மூன்று நாள் பயணம்

22 ஏப்ரல் 2026, 7:39 AM
உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு  விவசாயத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, பேராக்கிற்கு தனது மூன்று நாள் பயணம்

பாரிட், ஏப்ரல் 22 – நாட்டின் விவசாயத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு,  உள்நாட்டு வர்த்தகம், தொழில் முனைவு, வாழ்க்கைச் செலவினம் மற்றும் விவசாயத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு, பேராக்கிற்கு தனது மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

முதல் நாள் பயணம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் (KPKM) கீழான விவசாயத் திட்டங்களில் கவனம் செலுத்தியதாக அதன் தலைவர் சா கீ சின் தெரிவித்தார். இதில், சுங்கையில் மேற்கொள்ளப்படும் வெங்காய சாகுபடி திட்டமும் அடங்கும். இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும், பெரும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, உள்ளூர் வெங்காய சாகுபடி முயற்சி தொடங்கப்பட்டது என்று ராசா நாடாளுமன்ற உறுப்பினருமான சா குறிப்பிட்டார். இது விவசாயத் துறை மற்றும் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு வள மேம்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

"நாங்கள் பார்வையிட்ட 1.2 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட திட்டம், ஐந்து முறை நடவு மற்றும் அறுவடை சுழற்சிகளுடன் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டியுள்ளது. பேராக்கில் இன்னும் பல பகுதிகளில் வெங்காய சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று நான் அறிகிறேன்," என்றார்.

"இந்த சாகுபடி இன்னும் புதியது என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கமாகும். உள்ளூர் உற்பத்தி இன்னும் போதுமானதாக இல்லை. 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 20 விழுக்காடு உள்ளூர் உற்பத்தியை எட்டுவதே அமைச்சின் இலக்காகும்," என்று அவர் தித்தி காந்துங், நிரந்தர உணவு உற்பத்தி பூங்காவில் (TKPM) இனிப்புச் சோளப் பண்ணையைப் பார்வையிட்டபோது பெர்னாமாவிடம் கூறினார்.

இனிப்புச் சோள சாகுபடி குறித்துப் பேசிய சா, அதன் உற்பத்தி உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், கிராமப்புற மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார்.

"உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாவிட்டால், நாம் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இது நாட்டின் பணம் வெளியேறுவதற்குக் காரணமாக அமையும்," என்று கூறிய அவர், மலேசிய மக்களின் நலனுக்காக நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு இக்குழு உறுதுணையாக இருக்கும் என்றார். 

ஒவ்வொரு பயணத்தைத் தொடர்ந்தும், நாடாளுமன்றத்தில்  நிறுவனங்களுடன் கலந்துரையாடல் அமர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் அதிகாரப்பூர்வ அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்று சா கூறினார்.

"அனைத்து பரிந்துரைகளும் கண்டுபிடிப்புகளும் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப் படுவதை உறுதிசெய்ய, அந்த அறிக்கை மக்கள் சபையில் விவாதிக்கப்படும்," என்றார் அவர்.

கோவிட்-19 பெருந் தொற்றின் போது இறக்குமதி விநியோகச் சங்கிலியைப் பாதித்த அனுபவம், நாட்டின் உணவுப் பாதுகாப்பு உத்தியைத் திட்டமிடுவதில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இக்குழுவினர், பாசீர் ரெமிஸ், வடக்கு மஞ்சோங் மீனவர் தளம், பாகன் டத்தோவில் உள்ள நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்புக் குளங்கள் மற்றும் செபராங் பேராக்கில் உள்ள ஃபெல்க்ரா பிளான்டேஷன் சர்வீசஸ் நிறுவனத்தின் நெல் விதை மையம் உள்ளிட்ட பல இடங்களையும் பார்வையிட உள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.