கோலாலம்பூர், ஏப்ரல் 22 – நுண், சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (PMKS) அரசாங்கம் அறிவித்துள்ள 5 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதத் திட்டம், குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய செலவின அழுத்தங்களுக்கு மத்தியில், இத்திட்டம் PMKS நிறுவனங்களின் செயல் பாட்டு மூலதனத்தை பலப்படுத்துவதோடு, வர்த்தக வேகத்தையும் தக்கவைத்துக் கொள்ள உதவும்.
மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம் பாட்டுக் கழகத்தின் (மேட்ரேட்) தலைவர், டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைனா மெரிக்கன் கூறுகையில், ஏற்றுமதியைச் சார்ந்த நிறுவனங்களுக்கு போதுமான நிதி வசதி மிகவும் இன்றியமையாதது என்றார். செயல்பாட்டு மூலதனம், நிறுவனங்களின் தொடர் செயல் பாட்டிற்கும் அனைத்துலக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் முக்கிய தேவையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு வழங்கப்பட்ட சிறிய நிதி ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடுகையில், திங்கட்கிழமை அரசாங்கம் அறிவித்த இந்த முயற்சி, தற்போதைய சவால்களைச் சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் கூறினார்.
"இந்த 5 பில்லியன் ரிங்கிட், PMKS நிறுவனங்களின் மூலதனத்திற்கு பெரிதும் உதவும். ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, செயல்பாட்டு மூலதனமே மிக முக்கியமானது. எனவே, இந்த நிதி ஒதுக்கீடு PMKS-களுக்கு பெரும் நன்மைகளை வழங்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் இன்று இங்கு கூறினார்.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மலேசியாவின் வர்த்தக செயல்திறன் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில், வர்த்தக நடவடிக்கைகள் சுருங்குவதைத் தவிர்க்க தொடர்ச்சியான செலவினங்கள் அவசியம் என்று ரீசால் மெரிக்கன் கூறினார். அதே நேரத்தில், நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டு, சிறந்த செலவு நிர்வாகத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அதே சமயம், நிதி ஆதாரங்கள் திறமையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய, வீண்விரயங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.
PMKS நிறுவனங்கள் தற்போதைய அழுத்தங்களைச் சமாளிக்கவும், மலேசியாவின் ஏற்றுமதி செயல் திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும் இந்த நிதி ஆதரவு சரியான நேரத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி விநியோக நெருக்கடி மற்றும் மேற்கு ஆசிய மோதல் காரணமாக அதிகரித்துள்ள செயல்பாட்டு செலவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளை எதிர்கொள்ளும் PMKS-களுக்கு உதவ பல உடனடி நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திங்கட்கிழமை அறிவித்தார்.
அவற்றில் முக்கியமானது, வர்த்தக நிதி உத்தரவாத நிறுவனத்தின் (SJPP) கீழ் 5 பில்லியன் ரிங்கிட் உத்தரவாத ஒதுக்கீடாகும். இதன் கீழ், நிதி உத்தரவாத வரம்பு 70 விழுக்காட்டிலிருந்து 80 விழுக் காடாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், உத்தரவாதக் காலம் ஏழு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தைச் சமாளிக்க PMKS-களுக்கு உதவும் வகையில், பேங்க் நெகாரா மலேசியாவின் கீழ் 5 பில்லியன் ரிங்கிட் சிறப்பு வசதியை நிதியமைச்சருமான அன்வார் இன்று அறிவித்தார்.
நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் (PMKS) ஏற்றுமதி' வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கத்தின் 5 பில்லியன் ரிங்கிட் நிதி உத்தரவாதத் திட்டம்
22 ஏப்ரல் 2026, 4:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
வகைnational
உங்கள் கருத்து என்ன?



