கோலாலம்பூர், ஏப்ரல் 18: மலேசியா தனது சொந்த எண்ணெய் உற்பத்தியைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்று நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது. நாட்டின் தினசரி உற்பத்தி சுமார் 350,000 பீப்பாய்களாக இருக்கும் வேளையில், அதன் பயன்பாடு சுமார் 700,000 பீப்பாய்களாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மோதல், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கப்பல் வழித்தடங்கள் பாதிக்கப் பட்டது உட்பட, உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது.
"கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகளும் தாமதங்களும் ஏற்பட்டுள்ளன. தளவாடங்கள் மற்றும் காப்பீட்டுச் செலவுகள் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 40 விழுக்காடு உயர்ந்துள்ளது," என்று நிதி அமைச்சு குறிப்பிட்டது.
மலேசியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களில் 52 விழுக்காடு மற்ற எண்ணெய் நிறுவனங்களாலும், மீதமுள்ள 48 விழுக்காடு பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்தாலும் வழங்கப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.
மலேசியாவின் கச்சா எண்ணெய் ஆதாரங்களில் 48 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியிலிருந்தும், 38 விழுக்காடு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இறக்குமதி செய்யப்பட்டும், ஏழு விழுக்காடு தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்தும், மேலும் ஏழு விழுக்காடு மேற்கு ஆசியா மற்றும் பிற இடங்களிலிருந்தும் பெறப்படுகிறது.
நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாததால், சுத்திகரிப்பு ஆலைகளில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று நிதி அமைச்சு விளக்கியது.
"இந்த இறக்குமதிகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு தற்போது பாதிக்கப்பட்டுள்ள முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது," என்று அது கூறியது. மேலும், பெட்ரோல், டீசல், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றிற்கான உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய மலேசியா இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டும் என்றும் அது மேலும் கூறியது.
சனிக்கிழமையன்று, ஈராக்கின் பாஸ்ராவிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் 'ஓஷன் தண்டர்' கப்பல் மலேசியாவை வந்தடைந்தது என்று பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியது. இது நாட்டின் எரிபொருள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கான நிறுவனத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.
-- பெர்னாமா
ஒரு நாளைக்கு 350,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தி; ஆனால் மலேசியாவின் பயன்பாடு 700,000 பீப்பாய்
18 ஏப்ரல் 2026, 7:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






