மனிதக் கடத்தல், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது

15 ஏப்ரல் 2026, 9:34 AM
மனிதக் கடத்தல், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 15: கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் மூலம், மனிதக் கடத்தல் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கும்பல், சுமார் 10 கோடி ரிங்கிட் வரை லாபம் ஈட்டியுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் தெரிவித்ததாகப் பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, தலைநகரைச் சுற்றியுள்ள ஆறு இடங்களில் ஆறு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுப் பணியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.

"போலி ஆவணங்கள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இ-பாஸ், பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் அது தொடர்பான ரசீதுகள் உட்பட பல்வேறு மாற்றியமைக்கப்பட்ட குடிநுழைவு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்."

"மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 111 கடவுச்சீட்டுகள், 10 மடிக்கணினிகள், ஆறு கைபேசிகள் மற்றும் 3,950 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன."

"நேபாளம், இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஒரு உள்ளூர் ஆடவர் மற்றும் நிரந்தர வசிப்புரிமை பெற்ற வியட்நாம் பெண் உட்பட 26 முதல் 61 வயதுக்குட்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த நடவடிக்கையில், குடிநுழைவுத் துறை, மலேசியக் காவல்துறை மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியத்துடன் இணைந்து, மற்ற வலையமைப்புகளின் ஈடுபாடு மற்றும் கும்பலின் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவரும் வியட்நாம் பெண்ணும் இந்தக் கும்பலின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஸக்காரியா கூறினார்.

இதனிடையே, தலைநகர் ஜாலான் காலோவேயில் நடந்த ஒரு சோதனையில், இந்தக் கும்பலின் முக்கிய சூத்திரதாரியான 43 வயது நேபாள ஆடவரையும் நடவடிக்கைக் குழு கைது செய்ததாக அவர் கூறினார்.

"தப்பிக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய குற்றவாளி பயணித்த நிசான் சென்ட்ரா ரக வாகனத்தை நடவடிக்கைக் குழு வெற்றிகரமாக வழிமறித்தது."

"கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி, 43 வயதான நேபாள நாட்டைச் சேர்ந்த மகேந்திர ஜங் ஷா @ "எம்.ஜே" என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், இவர் 2016-ஆம் ஆண்டு புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (E8) கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது," என்றார்.

சட்டப்பூர்வமான வெளிநாட்டு நிபுணர் பாஸ் வைத்திருக்கும் சந்தேக நபர், இந்தக் கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்ததோடு, குற்றப் பின்னணியையும் கொண்டவர் என அவர் குறிப்பிட்டார்.

"சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்கள் இங்கு வேலை செய்வதற்குத் தேவையான போலி குடிநுழைவு ஆவணங்கள் மற்றும் பாஸ்களைத் தயாரிப்பதே இந்தக் கும்பலின் செயல்பாட்டு முறையாகும்.

ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் 5,000 முதல் 6,000 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குடிநுழைவுச் சட்டங்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து கிடைக்கும் வருவாய் சட்டம் 2001 (AMLA) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.