கோல திரங்கானு, ஏப்ரல் 13: பிலிப்பைன்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். ஏனெனில், அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸுக்கு எரிபொருளை விநியோகிப்பது பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனம் அல்ல, மாறாக விட்டோல் (VITOL) எனும் வெளிநாட்டுப் பொருள் வர்த்தக நிறுவனம் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
"பிலிப்பைன்ஸுக்கு எண்ணெயைக் கொண்டு சென்று விற்கும் ஒப்பந்தம் விட்டோல் நிறுவனத்திடம் உள்ளது. நாங்கள் (பெட்ரோனாஸ்) பிலிப்பைன்ஸுக்கு வழங்கவில்லை. ஆனால், நாங்கள் (அவர்களின் பயணத்தை) தடுக்கவில்லை. வழிமட்டும் வழங்குகிறோம். அந்த எண்ணெய் வெளிநாட்டு ஒப்பந்தத்தின் கீழ் மற்றவர்களுக்குச் சொந்தமானது."
"இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சவால்மிக்க இந்த பொருளாதாரச் சூழலில் நாட்டின் மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இம்தியாஸ் தேசிய அறக்கட்டளை இடைநிலைப் பள்ளியில் மாநில அளவிலான தஹ்ஃபிஸ் மாணவர்களுடனான மடாணி சிநேகபூர்வ சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திரங்கானு மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சுரி மொக்தார் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரங்கள்) டாக்டர் சுல்கிஃப்லி ஹசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸுக்கு டீசல் அனுப்பப்பட்டது தொடர்பான அறிக்கைகளில் தங்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று பெட்ரோனாஸ் நேற்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸில் உள்ள எந்தவொரு தரப்பினருடனும் இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை என்று அந்த தேசிய எண்ணெய் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.








